இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்த கட்சிகளாகும். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் திருத்தங்களையும் கொண்டு வந்தனர். முன்பு இதுபோன்று இடதுசாரிகள் முன்வைத்த நிர்ப்பந்தங்களின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கங்களை, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகளை, இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.
அந்த வகையில், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், அரசாங்கத்தின் தற்போதைய தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே! என்பதையும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயி களுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும். மிகவும் வீறாப் புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத் தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் ‘வாட்டர் கேனன்கள்’ மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் தில்லியை நோக்கி வருவதைத் தடுப்ப தற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற் படுத்தினர். பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். கைது நடவடிக்கையிலும் இறங்கினர். அதுமட்டுமல்ல, போரா டும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினைவாதக் கும்பல் என்று பொருள்படும் ‘துக்டே துக்டே கும்பல்’ என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் ‘போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்’ (‘Andolan Jeevis’) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லி யின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுவதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங் களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.
பாஜகவினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் வேளாண் சட்டங்க ளைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மை யில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா, என்பது சந்தேகமே! விவசாயிகளின் அமைதி யான போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து கொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதிதான் அரசாங் கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமை கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க தாகும்.
வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டவை என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள், தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தையடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?
நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையே ஆகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும். இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டது தான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கை களின் ஒரு பகுதியே ஆகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமே ஆகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை ஒழித்துக் கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருட்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். பண வீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டு செல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளா கும். ஏற்கெனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்ட வணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சய மாக அரசின் கொள்கை இதனை மேலும் மோசமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சி களும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்க ளையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்க ளுக்குத் தலைமை தாங்குவது தொடர்கிறது. துறை வாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற் சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்தி ருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடது சாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நட வடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவையும் ஒருமைப் பாட்டையும் அளித்து வருகின்றன. அது மேலும் மேலும் வலுப்பெறும். விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலா ளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன் னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமை யை வெளிப்படுத்தியமை ஆகும். போராட்டங்களின் போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார் பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப் படுத்துவதற்கு ஒரு நெம்புகோலாகவும் திகழும்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?
இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச் சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடு மையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயி களில் 85 சதவிகிதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவ சாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து, தாங்கள் இது காறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களி லேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப் படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருட்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடியதாகும். அத னால்தான் இந்தக் கோரிக்கையை பணக்கார விவசாயி கள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து- முஸ்லிம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தி னார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை (merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும் பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதே ஆகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் கார ணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருட்களை வாங்குபவர்கள் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலை யில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்ப ரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்ப தற்குத் தேவையான பொருட்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.
ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்தது போன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோச மாகி, அவர்கள் நுகர்பொருட்களை வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அள விற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயி யில் இருந்து சிறுகுறு விவசாயிகள் வரை, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும். ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதே யாகும்.
விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தி யில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுவாகிக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது. நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்று மையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழி லாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்க ளாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படு வதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடை பெற்ற போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயி கள் தியாகிகள் ஆகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப் பிடிக்கிறது. விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க பிரதமர் மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடை வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தி டும்.
நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்