states

img

முடிவில்லா பாதாளச் சாக்கடை பணியால் பரிதவிக்கும் நாகர்கோவில் மக்கள்

நாகர்கோவில், மார்ச் 29- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரின் முக்கிய சாலையான கோட்டார் சாலையில் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சவேரியார் ஆலயத்தில் இருந்து கம்பளம் வரை உள்ள சாலையில் பணிகள் நடைபெறுவதால் பேருந்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் சவேரியார் கோயிலில் இருந்து செட்டிகுளம், பீச் ரோடு வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கன்னியாகுமரியிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலயம் முதல் கம்பளம் வரை உள்ள சாலையில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைகள் அனைத்தும் மந்த நிலையிலேயே நடந்து வருகின்றன.

தொடங்கி பல நாட்களாகியும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் சாலையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வழியாக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இந்த சாலையின் இரு வழியாகவும் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று வருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். பாதாளச் சாக்கடை பணிகளால் நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் செல்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் ரயில் நிலையம் செல்ல முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் பயணிகளும், அன்றாடம் வேலைக்கு செல்லும் உள்ளுர் மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முக்கிய சாலை என்பதாலும் மாற்றுப்பாதையில் செல்ல சிரமம் ஏற்படுவதாலும் விரைவாக பணி முடித்து சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.