புதுதில்லி, மார்ச் 5- எஃகு இரும்பு உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியின் தேவையில் 85 சதவிகிதத்திற்கு இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாக வும், தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்திய நிறுவனங்கள் நிலக்கரியை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரண மாக, வர்த்தகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் நிலக்கரி டன்னுக்கு 500 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் சுருள்கம்பிகள் மற்றும் டிஎம்டி கம்பிகள் விலையில் 20 சதவிகிதம் அதிகரித்து டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சுருள்கம்பிகள் டன்னுக்கு 66 ஆயிரம் ரூபாய்க்கும், டிஎம்டி கம்பிகள் டன்னுக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. வாகன உற்பத்தி, வீட்டு உபயோ கப்பொருட்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஸ்டீல் பயன்படுத்தப்படுவதால், வீடுகள், வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் விலையும் இதன்மூலம் உயரும் என தொழிற்துறையினர் கூறுகின்றனர்.