states

img

மதவெறிக்கு மக்களைப் பலியாக்கும் இந்துத்துவா கூட்டம்!

ராய்பூர், ஜன. 8 - புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையை, மதப்பிரச்சனையாக மாற்றி, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை உறுதிமொழி ஏற்கவைத்த சம்பவம் சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்திஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் அரா மற்றும் குந்திகலா கிராமங்கள் அருகருகே இருக்கும் கிராமங்களாகும். அராவில் முஸ்லிம்களும், குந்திகலாவில் இந்துக்களும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.  அண்மையில், அரா பகுதியைச் சேர்ந்தவர்கள் குந்திகலாவில் புத்தாண்டு கொண்டாடியதாகவும், அப்போது ஏற்பட்ட பிரச்சனை, இருகிராமங்களுக்கு இடையேயான மோதலாக மாறி, அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசாரும், இரண்டு தரப்பிலும் 6 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பின்னணியில், வெளியில் இருந்து வந்த சிலர், குந்திகலா கிராம இந்து மக்களை, முஸ்லிம்களுக்கு எதிராக மதரீதியாக திருப்பி விட்டுள்ளனர்.

“நாங்கள் எல்லோரும் இந்துக்கள். நாங்கள் இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்குவோம். இந்த நாளில் இருந்து இஸ்லாமியர்களின் கடைகளில் எந்த பொருளும் வாங்க மாட்டோம். எங்களுடைய கடைகளை, நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு விட மாட்டோம். அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம். இஸ்லாமியர்கள் கிராமத்திற்கே வந்து பொருட்களை விற்றாலும் அதை வாங்க மாட்டோம்” என்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை உறுதிமொழி ஏற்க வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவவே, அது சத்திஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூபேஷ் பாகேல் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் விசாரணை நடத்திய துணை போலீஸ் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா, ‘‘சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியில் இருந்து சிலர் குந்திகலா கிராமத்துக்கு வந்து மக்களை தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உறுதியேற்க வைத்துள்ளனர். அவர்கள் யாரென கிராம மக்களுக்குத் தெரியவில்லை. மக்களை தூண்டி விட்டவர்களை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளார். ‘‘சாதாரண புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ளூர் அளவில் ஏற்பட்ட மோதலுக்கு சிலர் மதச்சாயம் பூசுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது’’ என்று சுர்குஜா மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா-வும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.