states

img

கொலைவெறி உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவர்கள்?!

புதுதில்லி, ஜன. 1 - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக தலைவர்கள், கடந்த டிசம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் “தர்ம சன்சத்” (‘Dharma Sansad’) என்ற பெயரில் மாநாடுகளை நடத்தினர். இதில், அப்பட்டமாக இந்துத்துவா மதவெறியைத் தூண்டிவிட்டனர். இதில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், தில்லி உள்ளிட்ட இடங்களில் சாமியார்களிடமிருந்து வெளிப்பட்ட வன்முறைப் பேச்சுக்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இதுதொடர்பாக சில இடங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சாமியார்கள், பாஜக தலைவர்கள் மட்டுமன்றி, அவர்கள் பள்ளி மாணவர்களையும் `இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவேன்’ என உறுதிமொழி ஏற்கவைத்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சுதர்ஷன் நியூஸ்’ என்ற வலதுசாரி ஊடகத்தின் ஆசிரியரும், ஆர்எஸ்எஸ்-காரருமான சுரேஷ் சாவன்கே இந்த வீடியோக்களை அண்மையில் பகிர்ந்துள்ளார். டிசம்பர் 29 அன்று சாவன்கேவின் டுவிட்டர் பக்கத்திலும், டிசம்பர் 28 அன்று அவரது ‘சுதர்ஷன் நியூஸ்’ ஊடகத்தின் டுவிட்டர் பக்கத்திலும் இதுதொடர்பான மூன்று வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.

 அவற்றில் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மற்றும் ருபைடிஹா பகுதி மாணவர்களும், மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதி மாணவர்களும் “இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்க யுத்தம் புரிவோம்.. எதிரிகளை கொலை செய்வதுடன், இந்த சண்டையில் உயிரை விடவும் தயாராக இருக்கிறோம்...” என்று சூளுரைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா பள்ளி மாணவர்கள் சூளுரை ஏற்ற பிறகு `பாரத் மாதா கீ ஜெய்’, `வந்தே மாதரம்’, `ஜெய் ஹிந்த்’ என்று முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். நாக்பூர் வீடியோவில், `பாரத் மாதா கீ ஜெய்’, `வந்தே மாதரம்’, `ஜெய் ஸ்ரீராம்’, `சத்ரபதி சிவாஜி மகாராஜ் கீ ஜெய்’ எனக் கூறுவது பதிவாகியுள்ளது. இதனிடையே, தில்லியில் ஹிந்து யுவ வாஹினி நடத்திய நிகழ்ச்சி மதவன்முறையைத் தூண்டியதாக ‘சுதர்சன் நியூஸ்’ ஆசிரியர் சுரேஷ் சாவன்கே மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.