புதுச்சேரி,நவ.1- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலை திருநாள் விழாவில் ஒன்றிய அரசிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத் தினார். பிரெஞ்சு காலனியாதிக்கத்தில் இருந்து கடந்த 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை அடைந்தது. அந்த நாளை கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரை காந்திசிலை முன்பு விடுதலைத் திருநாள் விழா செவ்வாய்கிழமை(நவ.1) கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணி வகுப்பு மறியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தனது விடுதலை திருநாள் உரையாற்றினார். புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,056 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்த துறை சார்பில் நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும். அனைத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும் என்றார். புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21ஆம் ஆண்டில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது
. இது 2021-22ஆம் ஆண்டில் சுமார் ரூ. 37 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டுகளில் தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது. எனவே, பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முப்படை பிரிவினரின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், எதிர்கட்சித் தலைவர் ஆர்.சிவா மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி,சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன்,அரசுச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் விடுதலை போராட்ட வீர்ர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். காரைக்காலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா,ஏனாமில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், மாஹேவில் குடிமைபொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.சரவணகுமார் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.