புதுதில்லி, ஜூலை 29- 2022-2023-ஆம் கல்வியாண்டில், பல்கலைக் கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்விப் படிப்புகளை புதிய இணையதளம் மூலம் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளம், தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ளவர் களுக்கும் உயர்கல்வி சென்றடைவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச கத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒன்றிய அமைச்ச கத்தின் கீழ் உள்ள 7 லட்சத்து 50 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலம் படிப்புகளை மாண வர்கள் இலவசமாகப் பெறலாம். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய உயர்கல்வித்துறை (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், உயர்கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்ற யுஜிசி முயற்சியின் ஒரு பகுதியாக, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் கிடைக்கும் என்றார். ஆனால், பொது சேவை மையங்களின் கட்டமைப்பை பயன்படுத்துவதால், அந்த மையங்களுக்கு மாணவர்கள் மாதம் ரூ.500 செலுத்த வேண்டி இருக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.