states

img

தேர்தல் பத்திரங்கள் - ஊழலின் ஊற்றுக்கண் பாஜக! - அறிவுக்கடல்

சட்டப்படி செய்ய முடியாத பணி ஒன்றை நமக்காகச் செய்ய, ஓர் அரசு அலுவலகத்திலுள்ள அலுவலருக்கு ஒரு தொகையைக் கொடுத்தால் அது லஞ்சம்.  அவர் வீட்டுக்குச் சென்று ஒரு புதிய மொபைல் ஃபோனைக் கொடுத்துவிட்டு, அதே பணியை நிறைவேற்றிக்கொள்ளும்போது அது அன்பளிப்பு. அந்தப் பணியால் நமக்குக் கிடைக்கிற லாபத்தில் ஒரு பகுதியை அளித்தால் அது கமிஷன்.  இப்படி விதவிதமான வடிவங் களில் நம்மிடையே லஞ்சம் நடைமுறையில் உள்ளது. அரசு அலுவலர்களின் சார்பில் கடை நிலை ஊழியர்கள் தொகையை வாங்கித்தரு வது, அதற்கென தரகர்கள் வைத்துக்கொள்வது, அலுவலகத்திற்குத் தொடர்பில்லாத இடத்தில் அதனை வசூலிப்பது என்று ஏராளமான வழி களும் கையாளப்படுகின்றன. எப்படி ஆனா லும் வழங்கப்பட்டது லஞ்சம்தான், செய்யப் பட்டது ஊழல்தான்.  அரசுப் பணத்தில் ஊழல் செய்வதற்கான 40 வழிகளை சாணக்கியர் தன் அர்த்த சாஸ்திரம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த அனைத்தையும் கடந்த ஊழல்களைத்தான் தற்போது மத்தியில் ஆளுகிற பாஜக அரசு செய்துகொண்ருக்கிறது என்பது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,  தகவல்களைத் தராமலிருக்க ஸ்டேட் வங்கி நிர்வாகம் சொன்ன ‘சாக்குகள்’, உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியதும் உடனடியாக தரவுகள் அளிக்கப்பட்ட முறை ஆகியவற்றின்மூலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சுத்தமான வணிக பரிவர்த்தனை

ஓர் அரசு அலுவலருக்கு லஞ்சம் கொடுத்து,  வாரிப் புறம்போக்கு நிலத்தில் பட்டா வாங்கி னால், கொடுக்கப்பட்ட லஞ்சமும், அதற்காகச் செய்யப்பட்ட ஊழலும் நேரடியாகத் தெரி கின்றன. ஆனால், எதைக் கொடுத்து, எது பெறப்பட்டது என்பது மட்டுமல்ல, யார் கொடுத்தா ர்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது இந்தத் தேர்தல் பத்திர நடைமுறை. தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்களான மக்களுக்கு இதைப் பற்றித் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதம், ‘திருடுகிற வீட்டின் உரிமையாளரிடம், திருடுவ தாக எப்படிச் சொல்ல முடியும்’ என்பது போலத் தான் இருந்தது. அதனால்தான் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில், “தேர்தல் பத்திரங்களாக நிறுவனங்களால் அளிக்கப்பட்ட நன் கொடைகள் என்பவை பலன்களைப் பெறு வதற்காகச் செய்யப்பட்ட ‘சுத்தமான வணிக’ பரிவர்த்தனைகளே” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

ஊழலுக்கான மாற்று வழி!

தேர்தல் பத்திரங்களை மோடி அரசு உரு வாக்கிய 2018இலிருந்து ரூ.16,518 கோடி  நிதி இப்பத்திரங்களின்மூலம் அளிக்கப்பட்டுள்ள தாக, அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தக வல் கூறுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ‘நன்கொடையாக’ அளித்தால், அதற்குரிய பலன் இருக்கத்தானே செய்யும்? அப்படிப் பலன் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ‘பெரிய’  நிறுவனங்கள், பெருமுதலாளிகள் ஆகியோர் தான் அப்படி அளித்தார்கள் என்பதை, விற்கப்பட்ட பத்திரங்களில் 94.41 சதவீதம் (சுமார் ரூ.15,600 கோடி!) அளவுக்கு, ரூ.1 கோடிக்கும் அதிகமான விலையுள்ள பத்திரங்கள்தான் என்பது விளக்குகிறது. ஆயிரம் ரூபாய் மதிப்பிலிருந்தே பத்திரங்கள் விற்கப்பட்டாலும், ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் வெறும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய்க்குத்தான் (0.01 சதவீதம்) விற்பனையாகியுள்ளன என்பது, அலுவலகத்துக்கு வெளியில் இருக்கிற தரகர் மாதிரி மாபெரும் ஊழல்களுக்கான மாற்று வழி இந்தத் தேர்தல் பத்திரம் என்பதை பட்டப்பரிவர்த்தனமாக்கியிருக்கிறது. 

சாணக்கியனை விஞ்சும் திருட்டுத் திறமை

அப்படி பத்திரமாக அளிக்கப்பட்ட நிதியில், மிகப் பெரும்பான்மையான தொகை ஆளும் பாஜகவுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்பது ‘எங்கப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை’  என்று காட்டுகிறது. 2022-23ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு இப்பத்திரங்களின் வழி யாக அளிக்கப்பட்ட நிதியான 850.4 கோடியில்,  ரூ.719.8 கோடி பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள் ளது. இந்த நிதியை அளித்த நிறுவனங்கள் யார் என்று மறைக்கப்படுவதால், அவர்களுக்கு என்ன கிடைத்தது என்பதை ஒப்பிட்டு, அதற் காகப் பெறப்பட்ட ‘லஞ்சம்’ என்று புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் இந்தத் திட்டத்தின்  பின்னுள்ள, சாணக்கியனை விஞ்சிய திருட்டுத் திறமை!  ஆனால், இவை பற்றிய சில தகவல்களை நியூஸ்-லாண்டரி(செய்திச் சலவை!), நியூஸ் மினிட் ஆகிய தளங்கள் ஆய்வு செய்து  வெளிப்படுத்தியிருக்கின்றன. இப்படியான அனைத்தும், பலன்களுக்காகக் கொடுக்கப்பட்ட விலை மட்டுமல்ல, மிரட்டியும் பெறப் பட்டவை என்பதைத்தான் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சுமார் ரூ.335 கோடியை கடந்த 5 ஆண்டுகளில் வழங்கிய 30 நிறுவனங்களை ஆய்வு செய்தபோது, அம லாக்கத்துறை போன்ற மத்திய முகமைகளின் நடவடிக்கையை ஒட்டி இந்த நன்கொடைகள் தரப்பட்டது தெரிய வந்திருக்கிறது. 

ரவுடிகள் மாமுல் மிரட்டி வசூலிப்பது போல்

சில நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபின் அவை நன்கொடை அளித்திருக்கின்றன. ரவுடிகள் மாமுல் மிரட்டி வசூலிப்பது போல் சில நிறுவனங்கள் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபின் நன்கொடை அளித்து, அதன்பின் நடவடிக்கை ‘நின்றுபோய்’ இருக்கிறது. குறைவான நிதி யளித்த சில நிறுவனங்களின்மீது ஏதாவ தொரு மத்திய முகமை நடவடிக்கை எடுத்த பின், இன்னும் கூடுதலாக நிதியளித்திருக்கின் றன. சில ஆண்டுகளாக நிதியளிக்காத நிறு வனங்களின்மீது மத்திய முகமைகளின் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் அவை நிதியளித்திருக்கின்றன. சரியாகச் சொன்னால், ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டி ‘மாமூல்’ வசூலிப்பது போன்ற செயலைத்தான், இன்னும் அதைவிடச் சிறந்த உதாரணம், தருமபுரம் ஆதீனத்தை பாஜக நிர்வாகி மிரட்டியது போன்ற செயலைத்தான், ஒன்றிய அரசைப் பயன்படுத்தி பாஜக நாடு முழுவதும் செய்திருக்கிறது. இந்த தேர்தல் பத்திர திட்டம் 2018இல்தான் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன், தேர்தல் அறக்கட்டளை என்ற அமைப்பு 2013இல் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட்டாக அமைக்கிற அறக்கட்டளைக்கு நிதி வழங்கி, அதிலிருந்து, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை பிரித்து அளிக்கப்படும். அந்தக் கட்டமைப்பாக இருந்தாலும், பின்னர் பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்தி ரங்களானாலும், ஆட்சியிலிருக்கிற பாஜகவே மிக அதிக நிதியைக் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது என்பது, ஆட்சிக்கு வந்ததி லிருந்தே இதே வேலையாகத்தான் (ஊழல் செய்வது!) இருந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. 

பாஜகவுக்கு 100 ரூபாய் காங்கிரஸ்க்கு 19 காசு காட்டுவது என்ன?

அதிலும் குறிப்பாக, 2022-23இல் இப்பத்தி ரங்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கிற நிதியில், பாஜகவுக்கு ரூ.100 வழங்கப்பட்டிருந்தால், மற்றொரு தேசியக் கட்சியான காங்கிரசுக்கு வெறும் 19 காசுகள் மட்டும்தான் வழங்கப் பட்டிருக்கின்றன என்பது, இது வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படுகிற நன் கொடையாக இல்லாமல், அரசிடமிருந்து பெறப்பட்ட சலுகைகள், ஒப்பந்தங்கள், நிறுத்தப் பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான மறைமுகக் கையூட்டாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. ஊழலை ஒழிக்க  வந்தவர்கள் என்று ஓயாமல் பேசி, பிற கட்சிகள் அனைத்தையும் ஊழல் கட்சிகள் என்று கூவிக் கொண்டிருக்கிற பாஜக, கையைத் தட்டிய வரே ‘யாருடா கையத் தட்டினது’ என்று கூவி யதைப்போல, தங்கள் ஊழலை மறைக்கவே அவ்வாறு செய்கிறது என்பதுதான் இந்தத் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களால் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.