states

டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில் செப்.13 இல் தீர்ப்பு

சென்னை,செப்.8- சென்னை அருகே துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில  உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்கு மாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள்  மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக  மகேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார்,

அவரது  மகள் ஜெயப்ரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல்  உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், 2016ஆம் ஆண்டு  நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு மகேஷ் தரப்பில் 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

;