சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களைப் போல பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூருக்கு அருகே 15 வயது பழங்குடியின சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங் கேறியுள்ளது. தன்னுடைய கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டிற்கு இழுத்துச் சென்றது. தொடர்ந்து அடித்து,உதைத்து சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து காட்டிலேயே விட்டுச் சென்றுள்ளது. மேலும் இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என அந்த கும்பல் மிரட்டி விட்டுச் சென்றுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் படல்கான் போலீசார் போக்சோ மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழங்குடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.