சென்னை,ஏப்.24- பிற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டு வருதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிபுனர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26 ஆயிரம் ஆக உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கியது. அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தால் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் மார்ச் 3 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது. இந்த சூழலில் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவிய நிலையில், தில்லி உள்பட வட மாநிலங்களிலும் கொரோனா பரவத் தொடங்கியது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திங்களன்று(ஏப்.25) மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.
சுகாதாரத்துறை கடிதம்
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் கரனோ பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூடக் கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும். முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி , மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்தவேண்டும். தேவையான நபர்களுக்கு பிசிஆர் கரோனோ பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல் வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உருமாறும் ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், அரசின் வழிகாட்டுதலான முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.