சென்னை, ஜூலை 19 - நாட்டு நலனையும், அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டையும் வங்கி ஓய்வூதியர் நிதி சார்ந்த நலனையும் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் பேங்க் முன்னாள் தொழிற் சங்க தலைவர்கள் கூட்டமைப்பு (AFCCOM) தலைவர் எஸ்.பி. ராமன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு : நாட்டில் 20.8 சதவிகிதம் பேர் ஏழை - எளிய மக்கள் பொதுத்துறை வங்கிகள் நாட்டுடமையாக்கப் பட்டு 55 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரும், நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாதது நாட்டின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டோரின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்கி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கடந்த ஜூன் மாதம் ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வின் படி ஏழை - எளியவர்களின் சதவிகிதம் 20.8 சதவிகிதமாக இருப்பதை அறிந்து, கலக்கத்தை வெளிப்படுத்தும் பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஒன்றிய அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்த முன் வர வேண்டும். கார்ப்பரேட் வரி இழப்பு ரூ. 1 லட்சம் கோடி கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி ஏழை - எளியவர்கள், பஞ்சை பராரிகள் வாடி வதங்கும் போது, ஆலை அதிபர்களுக்கும், வட்டிக்கடை வேந்தர்களுக்கும், பெரு நிலக்கிழார்களுக்கும், குட்டி குபேரர்களுக்கும் ஒன்றிய அரசு வரி விதிப்பில் காட்டும் சலுகை யும், மானியங்களை அளிப்பதில் காட்டும் தாராளமும் நல்லெண்ணம் படைத்த நடு நிலையாளர்களை நடுங்கச் செய்கிறது. வர்த்தகச் சூதாடிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அளித்த வரம்பற்ற கார்ப்பரேட் வரிச் சலுகையால் ஒன்றிய அரசுக்கு 1 லட்சத்து 241 கோடி வரி இழப்பு ஏற்பட்டி ருக்கிறது என்று எழுத்து மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதித்துறை இணைய மைச்சர் அளித்த பதில் நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரூ. 14.5 லட்சம் கோடிக்கு முதலாளிகளின் கடன் தள்ளுபடி கடந்த மார்ச் 2023 வரை பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடனில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது நாட்டின் பொருளா தார முன்னேற்றத்தை பெருமளவில் பாதிக்கும் என்ற கருத்தை ஒன்றிய அரசு கவனமாக கருத்தில் கொண்டு தகுந்த கொள்கைகளை வடிவமைப்பதோடு பாரபட்சமின்றி செயல்படுத்தவும் முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்த ெருந்தனக்காரர்களுக்கு காட்டப்பட்ட கருணை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காலம் கருதாது உழைத்த எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசியை எதிர்கொண்டு ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழும் மூத்த குடிமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முன் வரவேண்டும். ரூ. 1.41 லட்சம் கோடி லாபமீட்டிய பொதுத்துறை வங்கிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய இலாபம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி 30 ஆயிரத்து 859 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2024 ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய இலாபம் 1 லட்சத்து 41 ஆயி ரத்து 203 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய சீரமைப்பு (PENSION UPDATION) வழங்க முப்பது ஆண்டுகளாக தாமதம் செய்து வரும் இந்திய வங்கிகள் நிர்வாகத்தின் போக்கை தடுத்து நிறுத்தி நீதி வழங்க நிதியமைச்சர் முன்வர வேண்டும். 8 லட்சம் வங்கி ஓய்வூதியர்க்கு நீதி வழங்க வேண்டும்! ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற கருத்தோட்டத்தை கவனத்தில் கொண்டு, ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற சட்ட நடைமுறையை ஆழ்ந்து பரிசீலனை செய்து நாட்டின் நலனையும் வங்கியின் வளர்ச்சியையும் ஒரு சேர உறுதி செய்த எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு நீதி வழங்க நிதி நிலை அறிக்கை மூலம் நிதியமைச்சர் முன்வர வேண்டும். இவ்வாறு எஸ்.பி. ராமன் குறிப்பிட்டுள்ளார்.