சென்னை, ஜூலை 6 - அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் புதனன்று (ஜூலை 6) வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 2016-2021 அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2 முறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது அவரது ஆதரவாளரான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தியது. புதனன்று மூன்றாவது முறையாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சந்திரசேகர் இருந்து வருகிறார். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் உள்ளார். இவரது, வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் அமைந்துள் ளது. இங்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன் காலை 9 மணி முதல் சோதனையில் ஈடு பட்டனர். பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சந்திரசேகரின் வீடு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது மனைவி சர்மிளா மாநகராட்சியின் 38வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.