states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மும்பையில் ரூ.1,725 கோடி ஹெராயின் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் நவசேவா துறைமுகம் உள்ளது. இங்குள்ள கன்டெய்னர்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில், ஒரு கன்டெய்னரில் 22,000 கிலோ (22 டன்) ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,725 கோடி என கூறப்படுகிறது. இந்த ஹெராயினை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

ராகுலால் போக்குவரத்து பாதிப்பா?; இன்று விசாரணை

கொல்லம் முகத்தலாவைச் சேர்ந்த கே.விஜயன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற யாத்திரையை நடத்துவதன் மூலம் பொதுச் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு விளைவிப்பது சட்டவிரோதமானது” என்று கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி அமர்வில் வியாழனன்று விசாரிக்கப்பட உள்ளது.

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது

தில்லி சீமாபுரி பகுதியில் செவ்வாயன்று சாலைகளுக்கு இடையிலான டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் கரீம் (52), சோட் கான் (25), ஷா ஆலம் (38) மற்றும் ராகு (45) ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் அருகே அதிகாலை 1.51 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

ராகுல் நடைபயணம் நாளை ஒருநாள் நிறுத்தம்?

காங்கிரஸ் இடைக்காலத் தலைவரும், தனது அன்னையுமான சோனியா காந்தி, மருத்துவச் சிகிச்சைக்குப் பின் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 23-ஆம் தேதி ராகுல் காந்தி தில்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் நடைபயணத்தை நிறுத்த உள்ளதாகவும், மீண்டும் 24 ஆம் தேதி கேரளம் மாநிலம் சாலக்குடியில் இருந்து நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விநாயகர் ஊர்வலத்திற்கு ரூ.3.66 லட்சம் அபராதம்!

மும்பையில் கடந்த வாரம் விநாயகர் ஊர்வலத்தின்போது சாலைகளில் 183 குழிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, ஊர்வலத்தை ஒருங்கிணைத்த லால்பாக்சா ராஜா சர்வஜனிக் கணேஷோத்சவ் மண்டல் அமைப்பிற்கு, குழி ஒன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் விகிதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மோகன் பகவத்தை சந்தித்த முஸ்லிம் அறிவுஜீவிகள்

நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தில்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அறிவு ஜீவிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, இரு சமூகத்தினருக்கு இடையேயான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் முத்தையா காலமானார்

தமிழக சட்டமன்ற முன்னாள்  தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப் பட்டி முத்தையா (77) மதுரையில் உடல்நலக் குறைவால் புதனன்று காலமானார். இவர் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியை அடுத்த முத்தப்பன்பட்டிஆகும். கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்ற சபாநாயகராக இவர் பதவி வகித்தார்.  இவரது இறுதி நிகழ்வு மதுரை மாவட்டம் திருமங்கலம் குன்னத்தூரை அடுத்துள்ள முத்தப்பன்பட்டி யில் வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.

பாஜகவின் முகத்திரையை கிழிக்கும் போஸ்டர்கள்

பெங்களூரூ, செப்.21- கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு அரசுப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பா.ஜ.க. அமைச்  சர்கள், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.  இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 40 சதவீதம் பெறப்படும் என்ற வாசகத்தோடு முதல்வர் பசவராஜ்பொம்மை புகைப்  படம், க்யூ ஆர் குறியீடுகளுடன், பேசிஎம் என அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும்  www.40percentsarkara.com இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. 8447704040 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செல்போன்  எண்களில் கர்நாடக மக்கள்  பாஜக-அரசின் ஊழல் அனு பவங்களை பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட் டுள்ளது. இதுகுறித்து மூத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்த ராமையா கூறுகையில், மாநில நிர்வாகம் “கொள்ளை யர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள்” நிறைந்த “40 சதவீத கமிஷன் அரசு” என்று விமர்சித்தார். 

விடைபெறுகிறது தென்மேற்கு பருவமழை

சென்னை,செப்.21- தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வட மாநிலங்க ளில் பலத்த மழை பெய்தது. தமிழகத்தி லும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய கட்ச் (குஜராத்) பகுதி களில் இருந்து செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கியுள்ளது என்றும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக விடை பெறும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை விலகல் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது. 2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போது முதல் முறையாக செப்டம்பர் 3-வது வாரத்தில் பருவமழை விடை பெற தொடங்கியுள்ளது.

பருவமழை:  ரூ.20 கோடி ஒதுக்கீடு

சென்னை, செப்.21- வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்று வாய்க்கால் மற்றும் வெள்ள நீர் கால்வாய்கள் நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் முக்கிய நீர் வழிகளில் திடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், வெள்ளம், தொற்றுநோய்கள் பரவுதல், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் போன்ற வை ஏற்படுவதை தடுக்க, தூர் வார உத்தர விடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவ ட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தடைகள் தகர்ந்தன ஈரானின் ஏற்றுமதி அதிகரிப்பு

டெஹ்ரான், செப்.21- போலியான காரணங்களைக் காட்டி, ஈரான் மீது அமெரிக்காவும், மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் போட்டுள்ள தடைகளைத் தாண்டி, ஈரானின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் மோதலால் எண்ணெய் ஏற்றுமதியில் ஈரான் கவனம் செலுத்தி வருகிறது. டாலரை வாங்கிக் கொண்டு எண்ணெய் வழங்குவதோடு, சொந்த நாணயங்களிலும் வியாபாரம் பண்ணுவது பற்றி பல நாடுகளுடன் உடன்பாட்டை ஈரான் எட்டி வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவையும் ஈரான் வலுப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் விரைவில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை வைத்து மேற்கொள்ளப்படும் என்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் பேரீச்சம்பழத்திற்குப் பல நாடுகளில் கிராக்கி உள்ளன. ஆனால், அமெரிக்கா போட்ட தடைகளால் இதன் ஏற்றுமதி குறைந்தது. தற்போது பல்வேறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளால், பேரீச்சம்பழ ஏற்றுமதி மீண்டும் சூடு பிடித்துள்ளது. 85 நாடுகளுக்கு தற்போது ஈரானின் பேரீச்சம்பழம் அனுப்பப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த ஈரானின் விவசாயக்குழுத் தலைவர் அர்சலபான் காசிமி, “ஈரானில் உள்ள பல்வேறு வகை பேரீச்சம்பழங்கள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காதவையாகும். எங்கள் நாட்டில் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் நிலவுவதால்தான் இந்த பல வகையான பேரீச்சம்பழங்கள் கிடைப்பதற்குக் காரணமாகும். உள்நாட்டிலும் ஏராளமாக பேரீச்சம்பழம் நுகர்வு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.





 


 

;