states

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை எந்த நீதிபதி விசாரிப்பார்?

சென்னை, ஆக. 31- ஜாமீன்  தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு  வழக்கறிஞர்கள்  சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி யுள்ளனர்.   ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப் பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சென்னை சிறப்பு நீதி மன்றத்தை அணுகினர். அப்போது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி ரவி அறிவுறுத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் வியாழனன்று (ஆக. 31) முறை யிட்டது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை யில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகி யுள்ளதால் இந்த மனுவை எப்படி ஏற்பது என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். மாற்று அமர்வும் புதனன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுகிறோம் என்றும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக் கொண்டார்.எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். எனவே தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.