உதகை, ஜூலை 28- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஓராண்டு கடந்த பின்னும் இடைக்கால அறிக்கை யை சமர்ப்பிக்காதது ஏன் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.எடப்பாடி ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொட நாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வெள்ளியன்று நீதிபதி ஸ்ரீதரன் அமர்வில் நடைபெற்றது. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு இதே தேதியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு ஆகியும் இன்னும் ஏன் சமர்ப்பிக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார். இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிபிசிஐடி போலீஸின் மற்றொரு குழு மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருவதால் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு தொடர்பாக செய்தியாளர் களிடம் பேட்டி அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களுக்கு குஜராத் நீதிமன்றத்திலிருந்து அறிக்கைகள் பெறவேண்டிய நிலை உள்ளது. புலன் விசாரணை தொடர்பாக 19-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை சுட்டிக்காட்டியே அவகாசம் கேட்டோம் என்றார்.