பாஜக ஆளும் ஹரியானாவை தலைமையிட மாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருக்கும் சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கும், ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிற்கும் 40 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரவை பெற்றுள்ளார். 40 ஆண்டுகள் குற்றத்தண்டனை விதிக்கப்பட்டாலும் சாமியார் ராம் ரஹீம் சிறையில் சரியாக இருப்பது கிடையாது. அடிக்கடி பரோலை பெற்று வெளியே சுற்றி வருகிறார். சிறையில் உள்ள நாட்களைவிட வெளியில் சுற்றும் நாட்கள் அதிகம் என்ற நிலையில், கடந்த 10 மாதங்களில் 7-ஆவது முறையாக குர்மித் ரஹீமிற்கு பரோல் வழங்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் ஹரியானா மாநகராட்சி தேர்தல் சமயத்திலும் குர்மித் ராம் ரஹீமிற்கு பரோல் வழங்கப்பட்டு இருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியது. குர்மித் ராம் ரஹீமிற்கு அடிக்கடி பரோல் வழங்கப்படுவது தொடர்பான வழக்கு பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், “ராம் ரஹீமிற்கு இனி எங்கள் அனுமதியின்றி பரோல் வழங்கக் கூடாது. மார்ச் 10-ஆம் தேதிக்குள் குர்மித் ராம் ரஹீமை நீதிமன்றத்தில் சிறையில் அடைக்க வேண்டிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். அடுத்த முறை ராம் ரஹீமிற்கு பரோல் வழங்க வேண்டும் என்றால் எங்களின் அனுமதி இன்றி பரோல் வழங்கக் கூடாது. மேலும் எத்தனை பேருக்கு இதுபோல பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் ஹரியானா அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.