இராமநாதபுரம்,அக்.27- எய்ம்ஸ் மருத்துவக்கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் (22) முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வந்துள்ளார். மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டு கேணிக்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததால் தனது தந்தைக்கு தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறை அபிஷேக் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.