மனாகுவா, ஜூன் 6- கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றைக் காரணம் காட்டிப் பல்வேறு நாடுகளும் எரிபொருள் விலையை உயர்த்தி வருகின்றன. ஆனால் அத்தகைய விலையுயர்வு மக்களுக்கு தொல்லை அளிக்கும் என்பதால் விலைகளை உயர்த்தக்கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு நிகரகுவா அரசு ஆணை யிட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், “நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே விலைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. உற்பத்தி, சரக்கு விநியோகம் மற்றும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பதோடு, விலையுயர்வால் சாதாரண மக்களுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் 12 வாரங்களுக்கு விலைகளை ஏற்றக்கூடாது என்று ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.