நான்கு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 19- தமிழ்நாட்டில் மே 21 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 21, 22, 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.
கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திண்டுக்கல், மே 19- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் தொடர்மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் அந்த மாணவர் கள் படிப்பதற்கும், காலையில் பள்ளி களுக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் கொடைக்கானலில் கோடைவிழா தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணி களின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடைவிடாது மாலை நேரத்தில் பெய்யும் மழையால் அவர்கள் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.
நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட அரசு அனுமதி
சென்னை, மே 19- சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ளசிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி னர். இந்த நிலையில், நடராஜர் கோயில் கனக சபையில் ஏறி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா வழிபடச் சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இந்த காணொளி அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம், சிவனடியார் கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்பு கள் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் என போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
வழிபாடு நடத்தினர்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசின் அரசாணைப்படி, காவல்துறை பலத்த பாதுகாப்புடன் வியாழனன்று (மே 19) மாலையில் பக்தர்கள் அனுமதிக் கப்பட்டனர். முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போது அரசாணையை அமல்படுத்த தீட்சிதர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், அவர்களது கோரிக்கையை அரசு அதிகாரிகள் நிராகரித்தால், அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர் அரசு அதிகாரிகளை உடல் மொழி செய்கையால் கேலி செய்த வர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு பெரும் வெற்றியைத் தந்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் சயித் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் மொத்தமுள்ள 128 இடங்களில் 62 இடங்களில் ஹெஸ்புல்லா அமைப்பு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. அமெரிக்க ஆதரவுடன் களத்தில் இறங்கிய சிலரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அரசுக்கும், பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் செய்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைக்கான வேலைகள் நடக்கின்றன என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பும் உறுதி செய்துள்ளது. இருதரப்பிற்கும் இடையில் நடக்கும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டு சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் எந்தத் தவறும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 80 அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. கண் துடைப்புக்காக ஒரு விசாரணைக்குழுவை நியமித்து, அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததில் எந்தத்தவறும் இல்லை என்று அமெரிக்க ராணுவமே தீர்ப்பு வழங்கிக் கொண்டுள்ளது.