states

img

பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க மாநாடு: புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி, டிச.20- அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 7 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு டிசம்பர் 19, 20 ஆகிய  தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் சி.கே. நரசிம்மன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்  செயலாளர் கே.ஜி. ஜெயராஜ் துவக்கவுரை யாற்றினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் சிறப்புரையாற்றினார். தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இரண்டாவது விஆர்எஸ் திட்டத்தை அமல்படுத்த முயல்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு எதிரான  நவீன தாராளமய, தனியார்மய, உலகமய, பொருளாதார கொள்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை  ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4ஜி, 5ஜி சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு முழுமையாக ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக சி. ஞானசேகரன், மாநிலச் செயலாளராக ஆர். ராஜசேகர், மாநில பொருளாளராக ஏ. இளங்கோவன் உட்பட 25 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநிலப் பொருளாளர் நடராஜா நன்றி கூறினார்.