states

ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் வருகை

திருநெல்வேலி, ஏப். 27- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-ஆவது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன.  மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப் பட உள்ளன. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப் படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு புதன்கிழமை மாலை வந்தது. அங்கிருந்து மிகுந்த பாது காப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் வியாழக்கிழமை காலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் 3 டிரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக காவல்துறையுடன் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது.  அணு உலையில் 163 எரிக்கோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற் த்திக்கு பயன்படுத்தப்படும். தற்பொழுது 45 பண்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.