சென்னை,ஜன.23- ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீட்டர் கட்டணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2013இல் அறிவிக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கங்களோடு அமர்ந்து பேசி அறிவிக்க வேண்டும். நிர்ணயம் செய்கிற கட்டணத்தின் அடிப்படையில் ஆட்டோ செயலியை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்பட்ட புதிய ஆட்டோக்கள் வாங்கும்போது மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். எவ்வளவு கட்டணம் அறிவிக்க வேண்டும் என்று ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளும் ஆலோசனை கொடுத்துள்ள னர். ஆட்டோ செயலி செயல்படுத்துவது குறித்த ஆலோசனை களும் வழங்கப்பட்டது. மீட்டர் கட்டணத்தை முடிவு செய்து அரசு அறிவிப்பதால், அரசுக்கு எந்த நிதி சுமையும் ஏற்படப்போவதில்லை. அதேபோல் ஆட்டோ செயலி உருவாக்கி செயல்படுத்துவதிலும் பெரிய அளவிற்கான நிதி தேவையில்லை. நிதிச் சுமை இல்லாத இதுபோன்ற திட்டங்களை அரசு தாமதம் செய்யாமல் அறிவிக்க வேண்டும். ஆட்டோ தொழிலை கபளீகரம் செய்ய ஓலா, உபர், ரேபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடியுள்ளன. இதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீட்டர் கட்டணம் அவசியம். எனவே தமிழக அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்யாமல் நிதிச் சுமை இல்லாத, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை ஏற்கனவே தொழிற்சங்கங்களோடு கலந்து பேசிய அடிப்படையில் கட்டணத்தை தீர்மானித்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.