சிலையை நன்கு உற்றுப் பாருங்கள்! ஓர் ரஷ்ய ராணுவ வீரரின் சிலை. கையில் ஒரு குழந்தையை ஏந்தி இருக்கிறான். சிலை இருக்குமிடம் டெர்ப்டவர் [TERPTOWER] பூங்கா, பெர்லின், ஜெர்மனி. 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வீழ்த்தி சோவியத் செம்படை வென்றதன் நினைவுச் சின்னம். ராணுவ வீரரின் கையில் குழந்தை எதற்கு? போரின் கடைசி அத்தியாயத்தை சோவியத் செம்படை எழுதிக் கொண்டிருந்த போது ரஷ்யத் தளபதி மார்ஷல் ஜூக்கோவ் ஓர் உத்தரவிட்டார். “எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்காக பால் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். பெர்லினுக்கு பால் கொண்டு வர மத்திய பால் பண்ணைக்கு 25 லாரிகளை ஒதுக்கி வைக்குமாறு மேஷர் ஜெனரல் ஷிஷினுக்கு ஆணையிடப்படுகிறது. இதுகுறித்து ராணுவக் கவுன்சிலுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அனுப்ப வேண்டும்.” இந்த சிலை சொல்லிக் கொண்டிருப்பது இந்தச் செய்தியை மட்டுமல்ல சோஷலிசத்தின் உயர்ந்தபட்ச மனித நேயத்தையும்தான்.
இன்னொரு செய்தி : சிலப்பதிகாரத்தில் கண்ணகி சினந்து எழுந்து மதுரையை எரித்தாள். அப்போது பசு, பார்ப்பனர், பெண்கள், முதியோர், குழந்தைகள், நோயுற்றோர் நீங்கி தீயவர்களையே தீ எரிக்க வேண்டும் என ஆணையிட்டாராம். (பார்ப்பனரை ஏன் சேர்த்தார் என்பது தனி விவாதம். இதோடு முடிச்சுப் போட வேண்டாம்) யுத்தகளத்திலும் குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயுற்றோரை காக்கும் அறப்பார்வை சோவியத்துக்கு இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு இருந்தது. ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வெறி யுத்தத்தில் இதுவரை 4500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளும் 2500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனப் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனையைக்கூட வெறிகொண்டு தாக்கி அழித்திருக்கிறது இஸ்ரேல். இந்த இஸ்ரேல் வெறித்தனத்தை டிமோ முதல் கடைக்கோடி சங்கி ராஜா வரை மனச்சாட்சி இல்லாமல் ஆதரித்து மகிழ்கிறார்கள். இடதுசாரிகள் பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுக்கின்றனர் . நீங்கள் எந்தப் பக்கம் ?
- சு.பொ.அ.