சென்னை, ஜூன் 21- குழந்தைகள் கேட்டவுடன் பெற்றோர்கள் எதையும் உடனடியாக வாங்கிக் கொடுக்கக்கூடாது, ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்படி வாங்கிக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித் தர வேண்டும். அப்போது தான் தோல்வி பழகும் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார். பத்தாவது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம் என சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல ஆசிரியர்கள், நண்பர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. ரிசல்ட் பார்க்க தெரியவில்லை. ரிசல்ட்டை முழுமையாக உள்வாங்காமல், அந்த விநாடியில் தோன்றுவதை அதாவது குறைவான மதிப்பெண், தேர்ச்சியை தோல்வி என எண்ணுகின்றனர். முதலில் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது,
பெற்றோர் தன் குழந்தைகளுகளிடம் எப்படி பேசுவது என சொல்லி தரவேண்டியது அவசியமாகிறது. வெப் சீரிஸ், யூ டியூப் சேனல்கள் போன்றவற்றுக்கு சென்சார் அவசியமாகிறது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் மணிகண்டன் கூறியதாவது:- பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்போது வாழ்வின் நிறை, குறைகளை சொல்லி வளர்க்கவேண்டும். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, புத்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லி தரவேண்டும். அதிகம் படிக்காமல் வாழ்வில் வெற்றி பெற்றவர்களை உதாரணப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் 14 வயதுக்குமேல் சுயமாக சிந்தித்து, முடிவெடுக்கிறார்கள். அப்போது பெற்றோர்கள், குழந்தைகள் எதிரில் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதிக செல்லமும், அதிக கண்டிப்பும் கூடாது. கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஒருமுறைக்கு பல முறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்படி வாங்கிக் கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் தோல்வி பழகும். இவ்வாறு அவர் கூறினார். ஆண்கள் உடல் உறுதியிலும், பெண்கள் மன உறுதியிலும் பலமானவர்கள் என்கிறது மனோதத்துவம். தற்போதைய நடைமுறை வாழ்வில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இந்தியாவில் இப்படி நான்கு நிமிடத்துக்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது என்கிறது புள்ளி விவரம்.