ராஞ்சி, பிப். 5 - ஜார்க்கண்டில் சம்பாய் சோரன் தலைமையி லான கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சம்பாய் சோரன் அரசு 47 வாக்குகளைப் பெற்றது.
எதிராக 29 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதன்மூலம், ஜார்க்கண்ட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற பாஜக-வின் கனவில் மண் விழுந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலை வரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீது, அமலாக்க இயக்குநரகத்தை ஏவிய ஒன்றிய பாஜக அரசு, அவரை எப்படியாவது கைது செய்து, சிறைக்கு அனுப்பிவிட்டு, ‘ஆபரேசன் தாமரை’ மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டியது.
ரூ. 600 கோடிக்கு நிலமோசடியில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டி ஹேமந்த் சோரனுக்கு 10 முறை சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜனவரி 31 அன்று இரவு அவரைக் கைது செய்தது. முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி யது. ஹேமந்த் சோரனைச் சிறைக்கு அனுப்பி பழிவாங்குவதோடு, அவரது கட்சி எம்எல்ஏ-க்களை மிரட்டியும், விலைக்கு வாங்கியும் குறுக்குவழியில் ஆட்சிக்கும் வந்து விடலாம் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறிவைத்தது.
முதலில், பதவியில் இருக்கும் முதலமைச்ச ரைக் கைது செய்தால், அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியின் அடிப்படையில் மாநிலத்தில்குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தலாம் என்று கணக்குப் போட்டது. ஆனால், ராஜினாமாவுக்கு முன்னதாக, ஹேமந்த் சோரன் கைது மெமோவில் கையெழுத்திட மாட்டேன் என மறுத்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றி, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை ஆளுநர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு எதிர்பாராத வகையில், ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் ராஜினாமா கடிதம் கொடுக்கும்- அதே நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகை யில் ஆஜராகி, தங்களின் அடுத்த சட்ட மன்றக் கட்சித் தலைவராக சம்பாய் சோரனை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று அறிவித்தனர். சம்பாய் சோரனும் உடனடியாக ஆட்சி யமைக்க உரிமை கோரினார். இது குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று நினைத்திருந்த பாஜக-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், 24 மணிநேரத்திற்கும் மேலாக, சம்பாய் சோரனுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக குதிரைபேரம் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ-க்கள் 38 பேரும், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத் தலைநக ரான ஹைதராபாத்தில் வைத்துப் பாது காக்கப்பட்டதால், அவர்களை விலைபேசும் வாய்ப்பு பாஜக-வுக்கு கிடைக்கவில்லை. இதனால் தற்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது, என்ற முடிவுக்கு வந்த ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், வேறுவழியின்றி, சம்பாய் சோரனையே ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். சம்பாய் சோர னும் ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக வெள்ளியன்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில்தான், சம்பாய் சோரன் அரசு திங்களன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இதில் கலந்து கொள்வதற்கு, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்ததால், அவர் சட்டப்பேரவைக்கு வந்திருந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ-க்களும் ஹைதரா பாத்திலிருந்து ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படு வதற்கு முன் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதமும், இறுதியாக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. 81 உறுப்பினர்களைக் கொண்ட பேரவை யில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், 77 உறுப்பினர்கள் மட்டுமே பேரவையில் இருந்தனர்.
இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சிபிஐ(எம்எல்)-எல் மற்றும் ஆங்கிலோ-இந்திய சட்டப்பேரவை நியமன உறுப்பினரான க்ளென் ஜோசப் கால்ஸ்டான் உட்பட 47 உறுப்பினர்கள் ஆதர வாக வாக்களித்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஆட்சியையும் தக்க வைத்தது. பாஜக உறுப்பினர்கள் 26 பேரும், ஏஜேஎஸ்யு கட்சியின் 3 எம்எல்ஏ-க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். சுயேட்சை உறுப்பி னர் சரயு ராய் வாக்களிக்கவில்லை.
ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் : ஹேமந்த் சோரன் சவால்
“ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன். நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும்.
என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜக-வுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும். சவால் விடுக்கிறேன். அப்படி நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை” என்று பேசினார். ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் பேசுகையில், “நாடு முழுவதும் ஜனநாயகத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஹேமந்த் சோரனுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இன்று ஒட்டுமொத்த நாடும் பார்க்கிறது. நீங்கள் எந்த கிராமத்துக்கு சென்றாலும், ஹேமந்த் சோரனின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிலும் காணலாம். நான் ஹேமந்த் சோரனின் பார்ட்-2 என பெருமையுடன் சொல்கிறேன்” என்றார்.