கேரள அரசின் பட்டியல், பழங்குடியினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன்.அண்மையில் பையனூர் கோயில் விழாவில் பங்கேற்றபோது தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையை சுட்டிக்காட்டி ராதாகிருஷ்ணன் பேசினார்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையனூர் சிவன் கோயில் நடைபெற்ற நடைபந்தலை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்துள்ளார்.
திறப்பு விழாவின்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தீபத்தை தனது கையில் தராமல் பூசாரி அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். திறப்பு விழாவுக்கான தீபத்தை ஏற்றிய தலைமை பூசாரி, மற்றொரு பூசாரியிடம் தீபத்தை கொடுத்து குத்துவிளக்கை ஏற்றச் செய்துள்ளார்.
குத்துவிளக்கு ஏற்ற காத்திருந்த ராதாகிருஷ்ணனிடம் தீபத்தை தராமல் தரையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். தரையில் இருந்து தானே தீபத்தை எடுத்து ஏற்றுவேன் என பூசாரி கருதியதாகவும், ஆனால் அதனை எடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் கோயில் செயல் அதிகாரி தீபத்தை எடுத்து கொடுத்ததாகவும், ஆனால் அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அமைச்சருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையால் உடன் வந்த எம்.எல்.ஏ.வும் குத்துவிளக்கு ஏற்ற மறுத்துள்ளார்.
பின்னர் நடைபெற்ற கோயில் விழாவிலேயே தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையை பற்றி அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
நான் கொடுக்கும் பணத்தில் தீண்டாமை பார்க்காத பூசாரிகள் தனக்கு எதிராக மட்டும் தீண்டாமையை கடைபிடிப்பது ஏன் என விழாவிலேயே கேள்வி எழுப்பினார்.
கசாப்பு கடைக்காரர், மீன் வியாபாரி என பலரிடம் கைமாறும் பணத்தில் தீண்டாமை பார்க்காத பூசாரிகள் அத்தகைய மக்களிடம் மட்டும் தீண்டாமை பார்க்கிறார்கள் என்றார்.
நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பியவர்களைவிட ஜாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். மக்களை எப்படி பிரித்து பார்ப்பது என்பது ஜாதி கட்டமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெரிந்துள்ளது என்றார்.
சாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் மற்ற சாதிகளைவிட தாங்கள் மேலானவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு சாதியினரையும் தங்களுக்கு கீழ் உள்ள சாதியினரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர் என்றார்.
சமீப நாட்களாக இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக சனாதனம் குறித்து விவாதிக்கப்பட்டு நிலையில், பலரும் சனாதனத்தின் கொடுமை குறித்து பேசி வருகின்றனர். சனாதன கோட்பாடுகளை ஆதரிப்பவர்களோ சனாதனம் என்றால் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்காக கோட்பாடு என்று உண்மைக்கு மாறான செய்தியை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பிறப்பால் மனிதனை ஏற்றத்தாழ்வாக கருதும் சனாதன, வருணாசிரம கோட்பாடுகள் சமூகத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதற்கு எடுத்துகாட்டுதான் கேரளாவில் அமைச்சருக்கு நடந்திருக்கும் இந்த தீண்டாமை கொடுமை.