தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்த ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கேரளா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம், ஷாபி பரம்பில், என்.கே.பிரேமச்சந்திரன், வி.சிவதாசன் உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜுலை 23 செவ்வாயன்று தனது பட்ஜெட் உரையில் கேரளத்தின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. இந்த முறையும் கேரளாவுக்கு எய்ம்ஸ் மற்றும் சிறப்பு திட்டங்கள் இல்லை. ரூ.24,000 கோடி சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட கேரளத்தின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. ஒன்றிய அரசு கொடுக்கும் பொருளாதார நெருக்கடியுடன் இயற்கைச் சீற்றங்களும் சேர்ந்திடும் சூழ்நிலையில் கேரளா சிறப்புத் தொகுப்பைக் கோரியது. ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சிக்கு எந்த உதவியும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் கேரளத்துக்கு புதிய திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், இம்முறை கேரளத்தில் இருந்து பாஜகவுக்கு எம்.பி., கிடைத்தாலும், அம்மாநிலத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கேரள எம்.பி.க்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.