states

கேரளத்தில் ‘கிராம கல்வி பதிவேடு’

திருவனந்தபுரம், ஜன.22- கேரளத்தில், பொதுக் கல்வித் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து, ‘கிராம கல்வி பதிவேடு’ தயாரிக்கின்றன. இந்தத் திட்டம் ஒவ்வொரு உள்ளாட்சிப் பகுதி யிலும் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கை நிலைமைகளை உள்ளாட்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கச் செய்யும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இணையதளம் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கேரளாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகள் பற்றிய முழு தகவல்களையும் பள்ளி அதிகாரிகள் சேகரிப்பார்கள். இந்த தகவல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைக்கும். ஒரு குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்கள். இதற்கான காரணத்தை ஊராட்சி கண்டறிந்து, குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் படிப்பை பாதுகாக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இத்திட்டத்தை சமக்ர சிக்சா கேரளா செயல்படுத்துகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ், பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி மற்றும் இரு துறைகளின் உயர் அதிகாரிகளும், திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க உள்ளனர்.