science

img

அறிவியல் கதிர்

♦ செயற்கைப் பற்கள் மூலம் கேட்கும் திறன் 
விழுந்துவிட்ட பற்களுக்கு பதிலாகப் பொருத்தப்பட்ட செயற்கைப் பற்களில்(implants) ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் தாடை எலும்புகள் வழியாக உட்செவியை சென்றடைகின்றன என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வழக்கமாக பொருத்தப்படும் காது கேட்கும் கருவிகளுக்கு மாற்று கண்டுபிடிக்கப்பட லாம் என்று அமெரிக்க ஒலிக்கழக இதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன் கடைவாய்ப் பற்களில் கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. செவிக்குப் பின்புறமாக வைக்கப்பட்ட ஒலிபெருக்கியிலிருந்து ஒலிஅலைகளை இவை வாங்கிக்கொண்டன. இந்த கருதுகோளை சீன ஷாங்காய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜியான்ஜிங் தாவோ இன்னும் முன்னெடுத்து சென்று பற்களுக்கு பதிலாக பொருத்தப்படும் சாதனங்களை கேட்கும் கருவிகளாக மாற்ற நினைத்தனர்.  கேட்கும் திறன் இழந்தவர்களில் ஒரு செயற்கைப் பல் பொருத்திக் கொண்ட 38 நபர்களுக்கு ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன. அவர்களின் இயற்கையான பற்கள், மின்னணுக் கருவி மற்றும் காதுகளுக்குப் பின்னாலுள்ள எலும்பு ஆகியவற்றில் குரலோசைகள் செலுத்தப்பட்டன.இயற்கையான பற்கள் மற்றும் எலும்புகளில் செலுத்தப்பட்ட அலைகளுக்கு சமமாகவோ அல்லது இன்னும் துல்லியமாகவோ கருவிகளில் செலுத்தப்பட்ட ஒலிகளை இந்த சோதனையில் பங்கு பெற்றவர்கள் கேட்டனர். முன்பற்களில் பொருத்தப்பட்ட கருவிகள் பின்பற்களில் பொருத்தப்பட்டவற்றை விட சற்று சிறப்பாக செயல்பட்டன. முன் தாடை எலும்புகள் பின் தாடை எலும்புகளைவிட கடினமானவை என்பது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

♦ பிழைக்குமா அரிய ஆய்வு மையம்?

பிரமிட் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மற்றும் சோதனைசாலை எவரெஸ்ட் சிகர அடிவார முகாம் அருகில் 5050மீட்டர் உயரத்தில் 1990களில் நிறுவப்பட்டது. இத்தாலி நாட்டு தேசிய ஆய்வுக் கழ்கத்தின்(CNR) நிதி உதவியுடன் பருவநிலை மாறுதல்கள் குறித்த ஆய்வுகளை நடத்திக் கொண்டிருந்தது.  இந்த நிலப்பரப்பு அதிகம் தொந்தரவிற்குள்ளாத  பகுதி என்ப தால் வெப்பநிலை உயர்வு,மனித இடையீடு, மாசு ஆகியவை சுற்று சூழல்,உயிர் புவியியல் வேதியியல் சுழற்சிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய பொருத்தமான இடம்.  இத்தகைய ஆய்வுகளை துருவப் பிரதேசங் களில் செய்வது கடினம். அதிக உயரம், குறைந்த அட்ச ரேகையில் அபூர்வமான நிலப்பரப்பு ஆகிய சாதகமான நிலைகள் இமயமலையில் உள்ளன என்கிறார் நேபாள பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுதீப் தாகூரி.  ஆனால் இப்போது இத்தாலி நிறுவனம் நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளதால் இதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒரு சோதனை சாலை குறைந்தது முப்பது வருடன்களாவது தரவுகளை சேகரிக்க வேண்டும்.ஆகவே இந்த சோதனை சாலை 2024வரையாவது இயங்க வேண்டும் என்கிறார்கள்.இப்போது ஒரு ஒரு அலுவலர் மட்டுமே அங்குள்ள கருவிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

♦ செங்காந்தளில் வேதிப்பொருட்கள்  
தமிழ்நாட்டின் தேசிய மலராக இருப்பது செங்காந்தள் பூ.  இது குறித்த வருணனைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. கண்வலிக்கிழங்கு, கார்த்திகைப்பூ என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. பூமிப்பரப்பிலோ அல்லது அடியிலோ கிழங்கிலிருந்து தண்டுகளும் வேர்களும் தோன்றும் ரைசோம்(Rhizome) வகையை சேர்ந்தது. இதன் வேர்களும் விதைகளும் மருத்தவ குணம் உடையது. இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவ முறையில் புற்றுநோய், மூட்டு வாதம்,தொழு நோய்,வயிற்று வலி போன்ற வற்றிற்கு பல காலமாக பயன்படுத்தப்படுகின்றன.புற்று நோய் சிகிச்சையில் பயன்படும் கோல்ச்சிசைன், கோல்ச்சி கோசைட் போன்ற பொருட்கள் இதில் உள்ளன.இது தவிர பி-சிட்டோ சிடீரோல், செலிடோனிக் அமிலம், லுட்டோலின், ஸ்டிக்மாசிடீரோல் போன்ற மருந்துப் பொருட்களும் இருப்பதாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த கே.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. முன்பு விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.இப்போது அதிலிருந்து எடுக்கப்படும் சாறு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தி இந்து ஆங்கில நாளிதழ்  (11.11.22) செய்தியிலிருந்து

♦ இளமையிலேயே சர்க்கரை நோய்!

இன்றைய இளைஞர் தலைமுறை அவர்களது பெற்றோர்களைவிட 10-15 ஆண்டுகள் முன்பாகவே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.சென்னை மருத்துவ நிறுவனம் (madras medical mission) 100 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் இடைக்கால அறிக்கை இதை தெரிவிக்கிறது.அவர்களின் அழுத்தம் மிகுந்த வாழ்க்கை,உணவுப் பழக்கங்கள்,உடற்பயிற்சி இல்லாமை,ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஆகியவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்கிறார் அந்த மருத்துவ மனையை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மனோஜ் ஷா. 35 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள நோயாளிகளின் குடும்ப பரம்பரையை (family tree) ஆய்வு செய்ததில் இதற்கு முன் சர்க்கரை நோய் தொடக்கம் 40-50 வயதுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது பெற்றோர்களின் தலைமுறையைவிட 10-15 ஆண்டுகளுக்கு முன்பே நோய் தொடங்குகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களில் பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் பரம்பரையாக இல்லாத குடும்பப் பெண்களுக்கு கொழுப்பு செரிமானக் குறைபாடு அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது.அதே சமயம் சர்க்கரை நோய்  பரம்பரை யாக உள்ள குடும்பங்களில் ஆண்களுக்கு இந்தக் குறைபாடு அதிகம் உள்ளது. கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் நரம்பு சிதைவுகளுக்கு இட்டு செல்கிறது.குறிப்பாக கால்களில் இது தசைகளை பாதித்து காயங்களை உண்டாக்குகிறது.இதற்கான பாதுகாப்பான காலணிகளை பலர் அணிவதில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

;