science

img

அறிவியல் - இரமணன்

வலிப்பு நோய்க்கு புதிய சிகிச்சை  

மூளையின் மின் இயக்கங்களை அறிவதற்கு ஒரு மிகச்சிறிய, நெகிழ்வுத்தன்மை கொண்ட கருவி உதவலாம். அதன்மூலம் வலிப்பு வரும் வாய்ப்புகளை சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். 1-2 செ.மீ அகலமுள்ள பூ வடிவிலுள்ள இக்கருவி, ஒரு சிறிய துளையின் மூலம் மண்டையோட்டிற்குள் நுழைக்கப்படு கிறது. அதன்பின் அது நெகிழ்வான ஒரு கற்றை உணர்விகளை விரிக்கிறது. அவை மூளையின் மேற்பரப்போடு தொடர்பு கொண்டு அதன் மின் இயக்கங்களை கண்காணிக்கிறது. தற்போது உள்ள முறையில் மண்டையோட்டின் பெரிய அளவு பகுதியை நீக்கியபின் நேரடியாக மூளையின் மேல் உணர்விகள் வைக்கப்படுகின்றன. மினி பிக் எனப்படும் பன்றியில்  நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகள் இந்த புதிய முறை குறைவான அளவு உள்நுழைவு கொண்டது என்று காட்டியுள்ளது. மென் ரோபோ என அழைக்கப்படும் இக்கருவி ஒரு மைய அச்சும் அதை சுற்றி மென்மையான நெகிழ்வான இதழ் போன்ற ஆறு உணர்விகளும் கொண்டது.அச்சின் மீது மடிந்த நிலையிலிருக்கும் இதழ்கள் பின் விரிகின்றன என்கிறார் ஜெனீவாவிலுள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்த உயிரியல் பொறியாளர் ஸ்டெஃபானி லேகோர். மண்டையோட்டிற்குள் சென்ற பின், மய்ய  அச்சினூடே பாயும் உப்பு கரைசல், இதழ்களை மெதுவாக திறக் கின்றது. பின், செரிபிரல் கார்டெக்ஸ் எனப்படும் மூளை யின் மேற்பரப்பில் கிடைமட்டமாக அமர்கின்றன. சரியான இடத்தில் பொருந்தியவுடன் ஒவ்வொரு இதழிலும் உள்ள உணர்விகள் மூளையை கண்காணிக்க தொடங்கு கின்றன. மின் கம்பிகள் மூலம் தகவல்களை ஒரு கணினிக்கு அனுப்புகின்றன. லேகோர் குழுவினர் பன்றியின் மண்டையோட்டிற்குள் டெய்சி பூ அளவிலான உணர்விக் கற்றையை வெற்றிகரமாக செலுத்தி மின் இயக்கங்களை பதிவு செய்துள்ளனர். மனிதப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இதை விரிவுபடுத்தலாம் என்கிறார் அவர். எதிர்காலத்தில் கண்காணிப்பது மட்டுமல்ல மூளையின் இயக்கங்களை தூண்டவும் முடியும். இதன் மூலம் வலிப்பு தொடங்குவதற்கு முன்னரே அதை தடுத்து நிறுத்தலாம்; பக்கவாதத்தால் பழுதடைந்த மூளை பகுதி களை தூண்டலாம்; இது மூளைக்கும் கருவிகளுக்கும் இடையிலான இயக்கு தளமாக செயல்பட்டு கருவிகளை கட்டுப்படுத்த அனுமதிக்கும்.         

பால்பாகுபாடும்  மூளை பாதிப்பும் 

29 நாடுகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் எம்ஆர்ஐ ஸ்கேன்களை  ஆய்வு செய்ததில் பால் பாகுபாட்டின் காரணமாக ஏற்படும் அழுத்தம் பெண்களின் மூளையை பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசமான பால் அசமுத்துவம் உள்ள நாடுகளில் பெண்களின் மூளையின் வலது பகுதி ஆண்களை விட மெலிந்திருக்கின்றன. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளில் இந்த மாற்றங்கள் குறிப்பாக காணப்பட்டன என்கிறார் ஒரு ஆய்வாளர். 

மாம்பழம் மணக்கும் பைகள் 

தாவரங்களிலிருந்து பெறப்படும் தோல்களும் அதிலிருந்து உண்டாக்கப்படும் வளம் குன்றா நாகரிக பொருட்களும் பரவலாக பிரபலம் அடையும் இக்காலத்தில், மாம்பழம் அதிகம் உற்பத்தியாகும் இந்தியா, புதிய உள்நாட்டு தீர்வு ஒன்றை அளிக்க வல்லது. மாம்பழத் தோல்தான் அது. கரிம ஆதாரத்திலிருந்து தயாரிக்கப்படுவதும் இயற்கையாகவே மக்குவதுமான தோல் போன்ற பொருளை தயாரிக்கும் தேடலில் இது கிடைத்துள்ளது. சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத்தை (ஸிஎல்ஆர்) சேர்ந்த அறிவிய லாளர்கள் வைக்கோல், கரும்புத் தோகை, ஆரஞ்சு தோல், வாழைப்பழ தோல் உள்ளிட்ட வேளாண் பொருட்களை சோதனை செய்து வந்துள்ளார்கள். அவர்களின் சகோதர நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவையின் அடிப்படையில் மாம்பழத்தை தேர்வு செய்தார்கள். ‘குறிப்பிட்ட தரம் இல்லாததால் அறுவடைக்குப் பின் கணிசமான மாம்பழங்கள் வீணாகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பழங்களின் கூழ்தான் எங்களின் கச்சாப்பொருள்.’ என்கிறார் முதன்மை விஞ்ஞானி முனைவர் தணிகைவேலன். இயற்கையாக பெறப்பட்ட பாலிமரில் மாம்பழக் கூழை சேர்த்து பரப்புகள் தயாரிக்கப்படுகின்றன. சிஎல்ஆர்ஐ ஆய்வுக் குழு அல்போன்சா, கேசரி, பங்கனப்பள்ளி இன்ன பிற வகை மாம்பழங்களில் இந்த தொழில் நுணுக்கத்தை சோதித்ததில் இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்து வரும் மாம்பழங்களில் இதை செய்யமுடியும் என்று நிரூபணமாயிருக்கிறது. விலங்குத் தோலின் நீடித்த தன்மைக்கு மாம்பழத் தோல் இணையாகாது என்றாலும் அதை  விட  வேறு சில நன்மைகள் உள்ளன. மாம்பழத்திலிருந்து நல்ல அளவு எண்ணிக்கையில் விரிப்புகளை மூன்று நாட்களில் தயாரிக்க முடியும்.அதே அளவு விலங்குத் தோலிலிருந்து தயாரிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும்.விலங்குத் தோலுக்கு பெருமளவு நீரும் மற்ற வேதி பொருட்களும் தேவைப்படும். மாம்பழத் தோலுக்கு குறைந்த அளவே தேவைப்படும். மாம்பழக் கூழிலிருந்து தயாரிக்கப்படும் புதிய பொருள் பிவிசி, பியூ போன்ற  செயற்கை தோல் பொருட்களுக்கு மாற்றாகப்  பார்க்கப்படுகின்றன. ஏனென்றால் இவை குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் நிலைத்து இருக்கும்.பின் அவற்றை விரைவாக மக்க வைத்துவிடலாம். செயற்கை தோலை  பொறுத்த வரை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். தயாரித்த பின் மாம்பழத் தோலில் வண்ணங்கள், பூச்சுகள், அழகிய அச்சு வேலைப்பாடுகள் செய்து இன்னும் கவர்ச்சிகரமாக ஆக்கலாம். நெல் வைக்கோல், கோதுமை வைக்கோல் மற்றும் கரும்புத் தோகை ஆகியவற்றிலிருந்து தோல் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கும் சிஎல்ஆர்ஐ காப்புரிமை விண்ணப்பித்துள்ளது.     

சனியை  சுற்றி நிலவுகள்

அதிக நிலவுகளை கொண்ட கிரகமாக திகழ்ந்த ஜூபிட்டரை சனிகிரகம் முந்திவிட்டது. 62 புதிய நிலவுகளை விண்வெளியாளர்கள் கண்டுபிடித்த பின் சனிக்கிரகத்தின் மொத்த நிலவுகள் 145 ஆகிவிட்டது. ஃபெப்ரவரி மாதம்  சர்வதேச விண்வெளியாளர்கள் சங்கம், 12 நிலவுகளை ஜூபிட்டரின் கணக்கில் சேர்த்தபோது அதனுடைய  நிலவுகள் மொத்தம் 95 ஆனது.
 

;