science

img

சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் நிலவை சுற்றிவரும்

இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

புவனேசுவரம்,செப்.22- சந்திரயான்-2 விண்கல ஆர்பிட்டர் கூடுதலாக ஏழரை ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ)  விண்ணில் செலுத்திய  சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒடிசா மாநில தலைநகர் புவனேசுவரத்தில் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சந்திரயான்-2 விண்கலம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி நாங்கள் கூறுவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தை காட்டுவதில், வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட முழுமையானது. அடுத்த ஆண்டு விண்வெளிக்கு ஆளில்லா திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கிறோம். முதலில், விக்ரம் லேண்டருக்கு சரியாக என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. விக்ரம் லேண்டரை பொறுத்த வரையில்  தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதின்  காரணம் என்னவாக இருக்கும் என்பதை தேசிய அளவில் கல்வி யாளர்களையும், இஸ்ரோ வல்லுனர்களை யும் கொண்ட குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது. ஏதேனும் தரவுகள் கிடைத்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

 ஆரம்பத்தில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஓராண்டுக்குத்தான் நிலவை சுற்றி வர திட்டமிட்டிருந்தோம். அது மேலும் ஏழரை ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.  முழு திருப்தியை தருகிற வகையில் ஆர்பிட்டர் தொடர்ந்து அறிவியல் சோதனை களை செய்து வருகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. எதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தனவோ, அந்த நோக்கங்களை அவை சரியாக செய்து வருகின்றன என்று தெரிவித்தார்.

;