science

img

இந்தியாவில் கங்கண சூரிய கிரகணம்

சென்னை, ஜூன் 21- வானில் அரிய நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஞாயி றன்று காலை 10:22 மணியளவில் தெரியத் துவங்கியது.  கங்கண சூரிய கிரகணம் மும்பையில் தெளிவாகதெரிந்தது. சந்திரன், சூரியனைவிட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. இதனால்தான் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது. வெகு தொலைவில் நிலவு இருக்கும் போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம்(வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின் போது வெளித்தெரியும். எனவே இதனை கங்கண சூரியகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் 34 சதவீத கிரகணமே தெரிந்தது.  கிரகணத்தின் பாதை மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி, பசிபிக் பெருங்கடலில் முடிவடைவதற்கு முன்பு சவுதி அரேபியா, வட இந்தியா மற்றும் தெற்கு சீனா வழியாக  பயணித்தது. கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் ஒரு பகுதி கிரகணம் தெரிந்தது. வட இந்திய நகரங்களான தில்லி, சாமோலி, டேராடூன், ஜோஷிமத், குருசேத்திரா, சிர்சா, சூரத்கல் போன்ற இடங்களி லும் தமிழகத்தில்  சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் தெரிந்தது.