சிதம்பரம் இரவிச்சந்திரன்
மக்கக்கூடிய, மண்ணுடன் மண்ணாகும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றான புதியதொரு நெகிழிப்பொருளை வயநாடு இளைஞர் நீரஜ் கண்டுபிடித்திருக்கிறார். ஜூலை 1 2022 முதல் இந்தியாவில் பிளாஸ்டிக்கிற்கு முழுமையான தடை வந்ததுடன் இப்பைகள் பிரபலமடையும் என்று நம்பப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பிளாஸ்டிக் போலவே தோற்றமளிக்கும் இது சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சோளத்தில் இருந்து கிடைக்கும் மூலப்பொருளான ஸ்டார்ச்சில் இருந்து இந்த புதிய பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த மக்கக்கூடிய பை ஆறு மாதத்தில் மண்ணுடன் மண்ணாக இரண்டறக் கலக்கிறது. தேவைக்கேற்ற அளவு, தரம், விதத்தில் இதைத் தயாரிக்கமுடியும். முதலில் வயநாடில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மட்டும் இப்பைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. சிறிதுகாலத்தில் இது கேரளா முழுவதும் கிடைக்குமாறு செய்யப்படும். பனமரம் பஞ்சாயத்தில் நடவயல் பகுதிக்கு அருகில் இருக்கும் காயக்குன்னு என்ற இடத்தில் ஏ டி எஸ் க்ரீன் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் இப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அறுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் தொழிற்சாலை செயல்படத் தொடங்கியது. தற்போது ஏழு தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்க்கும் இத்தொழிற்சாலை 25 செண்ட் இடத்தில் அமைந்துள்ளது. மானந்தவாடி ஆலன் நினைவுக்கல்லூரியில் இளங்கலை மின்னணுவியல் படித்தார் நீரஜ். சத்தீஸ்கட் எஃகு கம்பெனி நடத்தும் அனில் டேவிஸ், லிஸி ஆகியோரின் மூத்த மகன். சகோதரன்நிகில் நீரஜிற்கு உறுதுணையாக செயல்படுகிறார். பெட்ரோலியப் பொருள்கள் எவையும் இதில் இல்லை என்பதால் காகிதத்தை எரித்தால் நேரடியாக சாம்பல் கிடைப்பது போல இதிலும் கிடைக்கிறது. இது சூழலிற்கு எந்தவிதத்திலும் கேடு செய்யக்கூடியது இல்லை. ஒரு சாதாரண பிளாஸ்டிக் பையில் இருந்து ஒரு மக்கக்கூடிய பையை எளிதில் அடையாளம் காணலாம். சாதாரண பிளாஸ்டிக் பையில் எதுவும் அச்சிடப்பட்டிருக்காது. ஆனால் இதில் கம்பெனியின் பெயர், உற்பத்தியாளரின் தனிப்பட்ட தொடர்பு எண், உரிம எண், மற்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். க்யூ ஆர் QR code) அடையாளம் இடப்பட்டிருக்கும். இதில் கம்பெனியின் இணையதளம், அதற்குள் உரிமம் போன்ற விவரங்கள் இருக்கும். 1968ல் ஐ நா வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட மத்திய பெட்ரோ வேதிப்பொருட்கள்&பொறியியல் தொழில்நுட்ப மையத்தின் (CIPET) உரிம எண், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிம எண்கள் ஆகியவை ஒவ்வொரு உற்பத்திப்பொருளிலும் இடம்பெற்றிருக்கும். இது தவிர இப்பையில் “நான் பிளாஸ்டிக் இல்லை” (not a plastic) என்று மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஓடைகள், ஆழ்கடலில் காணப்படும் டை குளோரோ மீதைல் என்ற ரசாயனப்பொருள் மண்ணில் பொருட்களை இயற்கையாக மக்கவைக்கிறது. இதைப் பயன்படுத்தியும் இப்பையை பரிசோதிக்கலாம். மீதைல் கரைசலில் இந்தப் பை மக்குவதை காணலாம். இதே சாதாரண பிளாஸ்டிக் பையை கரைசலில் போட்டால் அது மக்காமல் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம். சோளம் முதலில் செய்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. மற்றொரு தொழிற்சாலையில் இதில் இருந்து ஸ்டார்ச் பிரித்தெடுக்கப்படுகிறது. இக்கூட்டுப்பொருள் பி பி ஏ டி என்று அழைக்கப்படுகிறது. இதனுடன் கால்சியம் சேர்க்கப்படுகிறது. இதுவே இந்த நெகிழியைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளாக உள்ளது.
இந்தியாவில் இருந்தே மூலப்பொருள்
முன்பு இது வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி& வளர்ச்சிக் கழகம் (DRDO) ஹைதராபாத்தில் தயாரித்து தேவையான ஸ்டார்ச்சை அளிக்கிறது. மூலப்பொருளுடன் மற்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு 150 டிகிரிக்கு சூடாக்கப்படுகிறது. போதுமான காற்று கொடுக்கப்பட்டு குழாய் வழியாக மேல்நோக்கி அனுப்பப்படுகிறது. அங்கு நெகிழியாக மாறிய பொருளில் அச்சிடவேண்டிய விவரங்கள் அச்சிடப்படுகின்றன. தேவையான அளவுகள் ஏற்கனவே வார்ப்பு அச்சுகளாக உள்ளன. இரட்டையாக ஒட்டி வரும் பைகள் வெட்டு இயந்திரத்தின் மூலம் ஒரு பக்கம் மட்டும் வெட்டப்பட்டு திறப்பு ஏற்படுத்தப்படுகிறது. பிறகு திறந்த இடத்தில் கைப்பிடி பொருத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் போல இவற்றிற்கு மைக்ரான் அளவு கட்டுப்பாடுகள் இல்லை. இதை மறுசுழற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. சூழல் நன்மைக்காக எதையேனும் செய்யவேண்டும் என்று நினைத்த நீரஜ் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். அப்போது பிளாஸ்டிக்கிற்குப் பதில் ஒரு நல்ல மாற்றுப்பொருளைக் கொண்டுவர அவர் ஆசைப்பட்டார். காகிதப்பைகள் உற்பத்தி செய்ய எண்ணிய நீரஜ் ஒரு டன் காகிதம் உருவாக்க பல டன் மரங்கள் வெட்டப்படவேண்டும் என்பதை உணர்ந்தார். அதை கைவிட்டார். துணி போலத் தோன்றும் பைகள் பக்கம் அவர் கவனம் திரும்பியது. ஆனால் அதிலும் பிளாஸ்டிக்கே உள்ளது என்பது புரிந்தது. அப்போதுதான் அமெரிக்கா, யு கே, ஜெர்மனி போன்ற நாடுகளில் கம்போஸ்ட்டபிள் பைகள் நடைமுறையில் பிரபலமாக இருப்பதை அறிந்தார்.
பிளாஸ்டிக்கிற்கு எதிரான போரில் வெற்றி
பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் கடைசியில் பிளாஸ்டிக்கிற்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நீரஜ் தன் போராட்டத்தில் வெற்றிபெற்றார். நீரஜ் போன்ற இளம் தலைமுறையினர் சூழலிற்கு நட்புடைய விதத்தில் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டமுடியும். அப்போது அன்னை பூமி ஆனந்தமயமான உலகாக மாறும்.