ஆந்திர மாநிலம், சித்தூர் (தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியிலிருந்து கடந்த 2009 ஆண்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 -14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையெடுத்து ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவபெருமான், அம்பேத்கர், நாரதர், கலைஞர், எம்.ஜி.ஆர், அகத்தியர், ஹிட்லர், நாதஸ்வர வாசிப்பாளர்,..என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செப்-21, 2019 அன்று அவர் மறைந்ததையடுத்து பதினெட்டு கதாபாத்திரங்கள் கொண்ட கோப்புப் படத்துடன் கூடிய இரங்கல் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்கிற திரைப்படத்தில், அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் நடித்துள்ளார். நவம் என்றால் ஒன்பது.
கமலஹாசன் ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். தசம் என்றால் பத்து. நவம், தசம் இரண்டும் வடமொழிச் சொல்.
சரி, ஒரு நடிகர் பதினெட்டு வேடங்களில் திரையில் தோன்றுவதாகக் கொண்டால் அதற்கு என்ன பெயர்?
‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’ என்றொரு வரி பெரும்பாணாற்றுப் படையில் வருகிறது. இங்கு, பல் - பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து. அதாவது, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்கிறார் நச்சினார்க்கினியர். தமிழ் இலக்கியத்தில் கலம்பகம் என்றொரு வகை உண்டு. தமிழின் முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். இந்நூல் பல்லவ மன்னர்களில் ஒருவனாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.
‘பல்வகைச் சுவைகளும் பாங்குற நிறைந்து, தெய்வங்களையோ, மக்களுட் சிறந்தாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, பல்வகை உறுப்புக்களைப் பெற்று வருவதைக் கலம்பகம்’ என்பர். A Kind of poem Composed of different kinds of stanza’s என்று தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது.
கலம்பகம் - கலம்பு + அகம். இதன்படி, அகத்திலுள்ளதை கலந்து பேசுதல் என்பது பொருள்.
கலம் + பகம் எனப் பிரித்தும் பொருள் காணலாம்.
கலம் என்பதற்கு உண்கலம், பாண்டம், குப்பி, கப்பல், இரேவதி, அணிகலன், யாழ், கலப்பை, ஆயுதம், ஓலைப்பாத்திரம், ஒரு முகத்தலளவை, வில்லங்கம் என்பதாக பல பொருள் உள்ளன.
பேராசிரியர் எஸ்.வஜ்ரவேலு தொகுத்த புதுவை - காரைக்கால் வழக்குச்சொல் அகராதி கலம் என்பதற்கு பன்னிரண்டு மரக்கால் என்கிறது.
கலம் - பன்னிரெண்டு (டஜன்).
பகம் என்பதற்கு அவாவின்மை, ஈச்சரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரிய, மென்னுயறு குணம், அழகு, காந்தி, கொக்கு, பெண்குறி, மகத்துவம், முத்தி, கொடி என பல பொருளுண்டு.
மேலும் பகம் என்பதற்கு பாகம், பகுதி , பாதி எனவும் பொருள் கொள்ளலாம். பகம் என்பதே பாகம் - பாதி எனத் திரிந்தன. பகப்பிரிவினை என்பதே பாகப்பிரிவினை என்றானது.
பகம் என்பதற்கு வடமொழியில் ஆறு என்றொரு பொருள் உண்டு என்கிறார்
கி.வா.ஜ. கடவுளைக் குறிக்கும் பகவன் என்பது பகவான் என்கிற வடசொல்லின்
திரிபே. பகம் என்பது ஐசுவரியம்,வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்களைக் குறிப்பது. இந்த ஆறு குணங்களையுடையவன் ஆதலால் பகவான் என்ற பெயர் வந்தது.(விடையன் பதில்கள்).
கலம்பகம் - 12+6 =18.
கலம்பகம் உறுப்புகளாவன:-புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை,
தூது, வண்டு, தழை, ஊசல் (இலக்கண விளக்கம் ‘ பொருளதிகாரம்).
இதிலிருந்து பதிணென் வேடங்களுடன் திரையில் தோன்றும் நாயகனை கலம்பக நாயகன் எனலாம்.