அஸ்ஸாம் மாநிலத்தில் வசிப்பவர்களில் உண்மையான குடிமகன் யார், வெளிநாட்டி னர் யார் என்கிற கணக்கெடுப்பு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடந்தேறியது. Assam NRC | No last word yet on National Register of Citizens: Himanta Biswa Sarma. (THE HINDU). மொத்தமுள்ள 3 கோடி பேரில் 19 இலட்சம் பேர் வெளிநாட்டினர் என்கிற பட்டியல் வெளியானது. இப்பட்டியலிருந்தவர்களில் பலர் தாங்கள் அஸ்ஸாமியினரே எனக் கதறவும் எங்களை உண்மையான இந்திய அஸ்ஸாமி பட்டியலில் சேர்க்க வேண்டுமென வும் கோரிக்கை வைத்தார்கள். இந்நிலையில் அம்மாநில அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா (பாஜக), ‘மோடி மற்றும் அமித்ஸா இருவரும் இந்துக்களை கைவிடமாட்டார்கள். கவலை கொள்ள வேண்டாம். இப்பட்டியல் ஒன்றும் கடைசிச் சொல் அல்ல’ என்றார். இறப்பதற்கு முன் சொல்வதும், ஒரு சம்பவம் முடிவுறும் பொருட்டு மொழிதலும் கடைசிச் சொல் என அழைக்கலாகின்றன. காந்திஜி உச்சரித்த கடைசிச் சொல் - ஹேராம். ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ்?; காமராசர் - விளக்கை ‘அணை’. திருக்குறளின் கடைசிச் சொல் - பெறின். லிப்கோ ஆங்கில அகராதி - Zymurgy/ஆக்ஸ்போர்டு அகராதி - Zucchini/லியோ தமிழ் அகராதி - வௌவு/வேமன் அகராதி - வௌவால்/அபிதான சிந்தாமணி - க்ஷேமியன்/மணவை முஸ்தபா தொகுத்த மருத்துவக் களஞ்சியப் பேரகராதி - zz.
சரி, கடைசிச் சொல்லுக்குத் தமிழ் இலக்கணத்தின்படி என்னப் பெயர்? தொல்காப்பியம், ‘எழுத்து எனப்படுப அகர முதல் னகர இறுவாய்’ என்றும் அகத்திணை குறித்து ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப’ என்கிறது. இங்கு இறுவாய் என்பது முடிவு அல்லது முடிய. இறுவாய் என்பதற்கு இறப்பு அல்லது மரணம் என்றொரு பொருளுண்டு. பாவலர் தி.முருகுசுந்தரம் எழுதிய ஒரு வரலாற்று நூல் ‘கென்னடி வீர வரலாறு’. இந்நூல் தோற்று வாய் என்பதில் தொடங்கி இறுவாய் - இல் முடிகிறது. ‘இறுவாய்’ தலைப்பு கென்னடியின் மரணம் குறித்து பேசுகிறது. சரியாக இருபது ஆண்டுகளுக்கொருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் துப்பாக்கியால் படுகொலைக்கு உள்ளாகிறார்கள். 1.ஹாரிசன் (1840) 2. ஆப்ரகாம்லிங்கன் (1860) 3. கார்பீல்டு(1880) 4. மெக்கின்லி (1900) 5. ஹார்டிங் (1920) 6. பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் (1940). மேற்கூறியவர்களில் ரூஸ்வெல்ட் மட்டுமே உயிர் பிழைத்தார்.1960 ஆம் ஆண்டு கென்னடி அமெரிக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். கடைசி என்பதற்கு அந்தம் என்றொரு பதம் உண்டு. அந்தம் என்பதற்கு அழகு, கடை, கத்தூரி, குருடு, முடிவு, சாவு, எல்லை, அறியாமை என்பதாக வடமொழி அகராதி பொருள் தருகிறது. ஒரு பாடலில் இறுதியான சொல், பொருள், எழுத்து முதலியவற்றில் ஒன்றை வரும் பாட்டின் முதல் சொல்லாக வைத்து மாலை பின்னுவதைப் போல பாடுவது அந்தாதி. அந்தாதி என்பது வடமொழிச் சொல். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் ஈற்றெடுப்பு அல்லது ஈற்றுமுதலி.
இறுவாய் - ஈறு, ஈற்று, இறுதி.
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் ஒரு சொல்லின் கடைசி எழுத்தை ‘ஈறு’ என்கிறது. ஆண், பெண், பலர், அஃறிணை, உயர்திணை எனப் பிரித்துக்காட்டுவது ஈற்று எழுத்துகளே! அவ’ன்’; அவ’ள்’; அ’து’; அவ’ர்’; அவர்’கள்’. இங்கு ன், ள் - மெய்யீற்று; து (உ) - உயிர் ஈற்று.
ஈறு - பேன் இனத்தின் முட்டை; பற்கள் தசையுடன் வேர் கூடுமிடம்.
உப்பளம் - ஈறு (திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்தம்).
ஈறு என்பதற்கு எல்லை கடந்த சொல் என்றொரு பொருளுண்டு. உதாரணம், காந்தியின் பிரகடனம் ‘வெள்ளையனே வெளியேறு’.
ஈறுதப்பின பேச்சு தகாத மொழி (வட்டார வழக்கு). ஒருவர் எல்லை மீறும் போது அவரின் மீது பிரயோகிக்கும் மொழி.
ஈற்றயல் - இறுதிக்கும் முந்தையது (penultimate). ஈறாக - வரை (to). ஈற்றடி - கடைசி வரி.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - பாடாப் பைங்கிளி. இதில் பாடாத பைங்கிளி இதில் ‘த’ கெட்டு ‘ப்’ ஆக மாறியுள்ளது.
ஈறே முடிவும் பயனுமாகும். (கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு).
பிஸ்வா சர்மா, அறிவித்த கடைசிச் சொல் (இறுதி) ; இந்து மதத்தினரை மோடி, அமித்ஷா கைவிட மாட்டார்கள் (மதம் சார்ந்த தகாத மொழி) - இரண்டும் ‘ஈறு’ என்கிற ஒற்றைச் சொல்லால் குறிக்கலாம்.