குஜராத் மாநிலத்தில் ஜீப்புக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அதன் உரிமையாளர் மற்றும் அவர் நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கோத்தாரியா சாலையில் சாலையோரம் ஒரு ஜீப் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், தங்க நகைகள் அணிந்திருந்த நபர் ஒருவர், ஜீப் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அந்த ஜீப் கொழுந்துவிட்டு எரிந்தபோது அந்த இடத்தைவிட்டு அவர் செல்கிறார். இது போலீசாரின் கவனத்திற்கு வந்ததும், இந்த வீடியோவில் இருக்கும் இந்திரஜித் சிங் ஜடேஜா (33) மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிமேஷ் கோயல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜீப் என்ஜின் பலமுறை முயற்சி செய்தும் இயங்காததால் விரக்தி அடைந்த ஜடேஜா, அதனை தானே தீ வைத்து எரித்ததும், இதனை அவரது நண்பர் கோயல், செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக நெருப்பை கையாண்டதாக ஜடேஜா மற்றும் கோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.