கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்து குழந்தைகளை ஜெய் ஸ்ரீராம் என முழங்குமாறு இந்துத்துவ ஆதரவாளர்கள் வற்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள பட்டெளடியில் கடந்த வெள்ளியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டிய பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பிரார்த்தனையில் புகுந்த இந்துத்துவ கும்பல் அங்கிருந்தவர்களை ஜெய்ஸ்ரீரான் என முழங்குமாறு கட்டாயப்படுத்தினர். மேலும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகள் முன்னிலையில், நாங்கள் இயேசுவை அவமதிக்கவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை குழந்தைகள் மதத்தின் பெயரால் ஈர்க்கக் கூடாது. அது நடந்தால் இந்தியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் அழிந்துவிடும். அதனைக் காக்க நீங்கள் எல்லோரும் ஒரு உறுதிமொழியை எடுத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல், ஹரியானாவின் பட்டெளடியில் இஸ்லாமியர்கள் வெள்ளியன்று தொழுகையில் ஈடுபட்ட போது 10க்கும் மேற்பட்ட வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டுள்ளனர். அந்த காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.