india

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு விவிஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு

லக்னோ, டிச. 16 - அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா 2024 ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. இதற்கான பணிகள்  முழுவீச்சில் அயோத்தியில் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் தொடக்க விழாவைக் காண்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எப்படியும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று கணக்கிட்டு, இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தவிர, திறப்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், நாட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். விவிஐபி-க்களாக மட்டும் 7 ஆயிரம் பேர்  அழைக்கப்பட உள்ளனர் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில்தான், ‘ஆனந்த் மகோத்சவ்’ எனப்படும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு யாத்ரீகர்கள் வர  வேண்டாம் என்று ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத்ராய் வேண்டுகோள் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, சம்பத்ராய் பக்தர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “வரும் 22-ஆம் தேதி அயோத்திக்கு யாத்ரீகர்கள் வர வேண்டாம். சிறியதோ பெரியதோ உங்களுக்கு அருகில் உள்ள கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு எந்த தெய்வமாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பதாக கூறினாலும், இது ராமபக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.