india

img

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.46.28 லட்சம் கோடியாக சரிவு – ரிசர்வ் வங்கி  

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரங்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது மீண்டும் சரிய தொடங்கி உள்ளன. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது,  நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 30 கோடி டாலர் குறைந்து 60,106 கோடி டாலராக இருந்தது.  முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 385 கோடி டாலர் அதிகரித்து, 60,136 கோடி டாலராக இருந்தது.  

மேலும், கடந்த மே மாதம் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 59,751 கோடி டாலராக காணப்பட்டது. அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம். ஏனெனில், ஒட்டுமொத்த கையிருப்பில் இதன் பங்களிப்பே அதிகமாக உள்ளது.

மேலும், தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது. இவ்வாறு ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;