விமான பயணத்தின்போது தொலைந்துபோன தனது பையை கண்டுபிடிக்க விமானத்தின் இணையதளத்தையே பொறியாளர் ஒருவர் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மென் பொறியாளரான நந்தன் குமார் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, பெங்களூரு விமான நிலையத்தில், மற்றொரு பயணியிடம் இவரது பை மாறி சென்றுள்ளது.
இதையடுத்து வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது பை மாறி போனதை அறிந்த இவர் இண்டிகோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தனது பை மாறியது குறித்த தகவல்களை எடுத்துக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் தரப்பிலும், அந்த வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். மேலும், அந்த நபரின் விவரங்களை தனக்கு தந்து உதவுமாறு அவர் இண்டிகோ நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார். எனினும், தரவு பாதுகாப்பு, தனியுரிமையை காரணம் காட்டி அந்த பயணியின் விவரங்களை தர மறுத்துள்ளனர்.
இதனால் தான் பிரச்சினையைத் தானே தீர்த்துக்கொள்ள அவர் களமிறங்கியுள்ளார். அதன்படி, சக பயணியின் பையில் இருந்த பிஎன்ஆர் விவரங்கள் மூலம் இண்டிகோ இணையதளத்தை ஆராய்ந்து, வருகை பதிவை செய்தல், முன் பதிவை திருத்துதல், விவரங்களை புதுப்பித்தல் என பல முறைகளை கையாண்டுள்ளார். இருப்பினும், அவரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, இணையதளத்தை உருவாக்குபவரின் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு சென்று பயணிகளின் வருகை பதிவை ஆராய தொடங்கியுள்ளார். கடைசியாக, பையை எடுத்து சென்ற பயணியின் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணை கண்டுபிடித்துள்ளார்.
பின்னர், அவரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பையை மாற்றி கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது குறித்து இண்டிகோவுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து நந்தன் குமார் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இது வைரலான நிலையில், இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ரகசியமான தரவுகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம், நந்தன் குமார் இணையதளத்தை ஹேக் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.