ஜனவரி 22 (இன்று) அயோத்தியில் ஆர்எஸ்எஸ், பாஜக ராமர் கோவில் அறக்கட்டளை என்ற மூன்று அமைப்பினர் - இவர்களோடு சேர்ந்து பிரதமர் மோடியும் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப் போகிறார்கள். இதற்கு அழைக்கப்பட்ட 2 ஆயிரம் பேரில் பாஜகவின் மூத்தத் தலைவர் அத்வானியும் ஒருவர். அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அத்வானி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ‘ஸ்ரீராமர் கோவில் தெய்வீக கனவை நிறைவேற்றுதல்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். யாருடைய தெய்வீக கனவு என்று அத்வானி சொல்லுவது அந்த ராமனுக்குத்தான் வெளிச்சம்.
மோடி பிரதமராகி 10 ஆண்டுகள் முடியப்போகிறது. இந்தக் காலத்தில் எந்த ஒரு பெரிய நிகழ்ச்சிகளுக்கும் அத்வானியை மோடி அழைக்கவில்லை. ராமர் ஜென்ம பூமி என்று கூறப்பட்டு, கட்டப்பட்டிருக்கிற கோவில் அத்வானினுடைய ரதயாத்திரையோடு இணைந்தது. அவர் இல்லாமல் 1990ல் நாடு முழுவதும் நடைபெற்ற ரதயாத்திரையும் இல்லை.
தேசம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவா சக்தியை திரட்டி பல்வேறு விதமான கலவரங்கள் நாடு முழுவதும் நடப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் அத்வானிதான். இன்று ராமர் கோவில் புனரமைப்பு நிகழ்ச்சி என்றும், கும்பாபிஷேகம் என்றும் புதிய வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அன்று, “ராமர் கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்திலே 400 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் முஸ்லிம் மசூதி கட்டப்பட்டுள்ளது; எனவே ராமனின் உறைவிடத்தில் பாபர் மசூதி என்பது இந்துக்களுக்கு அவமானம். இது இந்தியாவுக்கு அவமானம். இந்த களங்கத்தை துடைக்க அனைவரும் அயோத்தியை நோக்கி புதிய கோவில் கட்டுவதற்காக செங்கலோடு திரண்டு வாருங்கள். ஒவ்வோரு ஊரிலிருந்து ஒவ்வொரு செங்கல் கொண்டு வரப்பட வேண்டும்” என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த - சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிகழ்வு. அன்று இன்றைய பிரதமர் மோடி போன்ற நபர்கள் ஒரு பொருட்டாகவே இல்லை. அதை அத்வானி தன்னுடைய கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே கட்டுரையில், தனக்கு கோவில் கட்டுவதற்கு ராமர் தான் மோடியைத் தேர்வு செய்தார் என்று அத்வானி குறிப்பிட்டிருப்பதுதான் விநோதம். பாபர் மசூதி இடிக்கப்பட்டது 1992 டிசம்பர் 6ஆம் தேதி. ராமருக்கு புதிய கோவில் கட்டித் திறப்பது 2024 ஜனவரி 22ஆம் தேதி.
32 வருடத்திற்கு முன்பே, தனக்கு கோவில் கட்ட ராமர் மோடியை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற அத்வானியின் கூற்று, மிஞ்சியிருக்கும் காலத்தை மோடியின் தயவில் மரியாதையாக ஓட்டிவிட வேண்டும் என்ற அவரது சரணாகதியின் அடையாளமே! பாபர் மசூதியை தகர்க்க வேண்டுமென்பதும், அந்த இடத்தில் ராமருக்கு ஒரு புதிய கோவில் கட்ட வேண்டும் என்பதும் ஆர்எஸ்எஸ் உருவான காலத்திலே அவர்களுடைய லட்சியமாக இருந்தது. பெரும்பகுதி மக்களால் வணங்கப்படுகிற ஒரு கடவுளின் பெயரால் ஒரு பெரும் மோதலை உருவாக்குவதும் அதை முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்துவதும்,
அது ஒரு கலவரமாக இருந்தால் பெரும்பகுதியான மக்களை இந்துத்துவா உணர்வுடன் திரட்டுவதற்கு பயன்படும்; அது பாஜகவின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதுதான் அவரது அரசியலின் நோக்கம். இதைத்தான் 1990 காலகட்டத்தில் அத்வானி அரங்கேற்றினார் ரதயாத்திரையின் மூலமாக. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின்பு அந்த இடத்தில் தனக்கு கோவில்கட்ட பொருத்தமானவர் மோடி தான் என்று ராமனே தேர்வு செய்தார் என்று கூறும் அத்வானி, 92இல் பாபர்மசூதியை இடிப்பதற்கு ராமர் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று சேர்த்துச் சொல்லியிருந்தால், நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். 1992 காலகட்டத்தில் பாபர் மசூதியை நோக்கி ஆர்எஸ்எஸ், விஸ்வஹிந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளோடு, காவி உடை அணிந்த ஏராளமான பாஜகவினரும் உடன் சென்றனர். உத்தரப்பிரதேச போலீஸ் பாபர்மசூதி இடிப்பு சம்பவத்தை தடுக்கவில்லை. அன்று உ.பி.,பில் பாஜக தலைமையிலான ஆட்சி. அங்கு முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், பிரதமர் நரசிம்மராவ் அவர்களுக்கு நிலைமையைப் பற்றி விளக்கும் போது, “நான் என்னுடைய போலீசை வைத்து பாபர் மசூதியை இடிப்பு சம்பவத்தை நடக்கவிடாமல் தடுக்க முடியும். எனவே நீங்கள் ராணுவத்தை அந்தப் பகுதிக்குள் அனுப்ப வேண்டாம்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை பிரதமர் நரசிம்மராவே சம்பவத்திற்கு பின்பு பத்திரிகை பேட்டிகளில் குறிப்பிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்துவிட்டால் தன்னிடம் யாரும் கேள்வி எழுப்பி தான் பதில் சொல்லும் நிலை ஏற்படாது என்பதுதான் அவருடைய திட்டமிட்ட செயல்.
ஆனால் இன்று அத்வானி அவர்கள் பேசுவதும், பிரதமர் மோடி பரபரப்பாக செயல்படுவதும், 11 நாட்களுக்கு மோடி அவர்கள் விரதம் இருப்பதும் பிரபலமான இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் இவர்கள் கடந்த காலத்தில் செய்துவந்த செய்த அப்பட்டமான - அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளை இன்று நியாயப்படுத்துவதற்கும்,
32 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் இருப்பவர்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள், சட்டவிரோத காரியங்களை -இனப்படுகொலைகளை - மதரீதியான மோதல்களை நடத்தினாலும், அதை கடவுளின் பெயரை முன்னிறுத்தி நியாயப்படுத்துவதற்குமான செயல்களே. அதனால்தான் மசூதி இடிப்பை மறைத்து விட்டு; அதனால் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரர்கள் கொல்லப்பட்டதையும் மறைத்துவிட்டு; அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு செங்கலுடன் வாருங்கள் என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தததையும் மறைத்துவிட்டு; புதிய ராமர் கோவில் கட்டுவதற்கான உலகம் முழுவதும் 3 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த விபரங்களையும் மறைத்துவிட்டு; அதில் மிகப்பெரிய மோசடிகள் நடந்துள்ளன என்று அந்த அறக்கட்டளைகளில் இருக்கும் பலர் சொல்வதையும் புறக்கணித்துவிட்டு இன்று பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.