புதுதில்லி, பிப். 11 - 2022-2023 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ. 1,300 கோடியை பாஜக நிதியாக பெற்றுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வெறும் ரூ. 171 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது.
இவ்வளவு இருந்தும் தேர்தலுக்காக ரூ. 1,092 கோடி மட்டுமே செலவிட்டுள்ளதாக பாஜக கணக்கு காட்டியுள்ளது. இதில் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வெறும் ரூ. 71 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே செலவழித்ததாகவும், பழைய பேப்பர்களை விற்றெல்லாம் கட்சிக்கு நிதி திரட்டியதாகவும் கூறியுள்ளது.
2022-23 நிதியாண்டில் பாஜக-வின் வருவாய், அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரத்து 360 கோடியே 84 லட்சம் சம்பாதித்துள்ளது, இது காங்கிரஸ் கட்சியின் வருமானத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சியின் வருடாந்திர தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
உயர்ந்து கொண்டே போகும் பாஜக-விற்கான நன்கொடை
2021-22-இல் ரூ. 1,917 கோடியாக இருந்த பாஜக-வின் மொத்த வருமானம், 2022-23இல் ரூ. 2,361 கோடியாக உயர்ந்துள்ளது.
2022-2023 நிதியாண்டில் பாஜகவுக்கு கிடைத்த மொத்த நன்கொடை நிதி ரூ.2,120 கோடி. (யார் கொடுத்தார்கள் என கணக்கில் காட்ட வேண்டிய தேவையில்லாத) தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டும் ரூ. 1,294.14 கோடியைப் பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் வரை ரூ.2,800 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இதில், சரிபாதி தொகையை பாஜக பெற்றுள்ளது.
பாஜக-விற்கு நன்கொடைகள் மூலம் ரூ.2,120.06 கோடி கிடைத்துள்ளது (தேர்தல் பத்திரங்கள் உட்பட), வங்கி வட்டி மூலம் வரு மானமாக ரூ. 237.3 கோடி கிடைத்துள்ளது. இதில், தேர்தல் செலவு, விளம்பரங்களுக்காக ரூ. 432.14 கோடியும், விமானம் மற்றும் ஹெலி காப்டர்களை வாடகைக்கு எடுக்க ரூ. 78.22 கோடியும், வேட்பாளர்களுக்கு நிதியுதவியாக ரூ. 75.05 கோடியும், பத்திரிகையாளர் சந்திப்பு களுக்கு ரூ. 71.60 லட்சமும் என மொத்தம் ரூ. 1,092.15 கோடி செலவிட்டுள்ளதாக பாஜக கணக்கு காட்டியுள்ளது.
பழைய பேப்பர் வியாபாரம் பார்த்த பாஜக
பழைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகை களை 2021-22-இல் ரூ. 1.33 லட்சத்திற்கு விற்றுள்ளதாக பாஜக கூறியுள்ளது. 2022-23-இல் ரூ.15.59 லட்சத்திற்கு பழைய செய்தித்தாள்களை விற்றுள்ளதாகவும், நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்குவதற்கு ரூ. 43.89 லட்சம் செலவழித்துள்ளதாகவும் கூறி யுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நிதி திரட்டியதை விட பாஜக மூன்று மடங்கு அதிக நிதியைப் பெற்றுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரை பாஜகவுக்கு ரூ. 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பாஜக-வின் அலுவலகச் செயலாளர் இந்தப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதை தேர்தல் ஆணை யம் 2023 அக்டோபர் 31 அன்று மாலை 5.45 மணிக்கு கிடைக்கப்பெற்றதாக கையொப்ப மிட்டுள்ளது. இது 441 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பாஜக-வின் கணக்கு உண்மையல்ல
ஆனால், “தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு - செலவு கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை.. இதுபோல இன்னும் பல மடங்கு கணக்கில் காட்டப்படாமல் உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தேர்தல் செலவுகள், விளம்பரச் செலவுகளை மொத்தமாகக் கூட்டினால் கூட, பாரதிய ஜனதா கட்சி செலவழித்த தொகையை நெருங்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு விற்கின்றனர், இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே அரசுக்கு வந்து சேர்கிறது. மற்றொரு பகுதி மறைமுக மாக செல்கிறது. மறைமுகமாக பெற்ற தொகை யை மறைப்பதற்காக நாங்கள் வெளிப்படை யான கட்சி, நேர்மையான கட்சி எனக் கூறிக் கொள்வதற்காக ‘விளம்பரத்திற்கு ஏராளமாக’ செலவு செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
“பாஜகவின் கஜானாவே கள்ளத்தனமான தேர்தல் பத்திரத்தில்தான் இருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமும் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.
2021-2022-இல் காங்கிரஸ் கட்சியின் மொத்த வரவு ரூ. 541.27 கோடி. 2022-23-இல் கிடைத்த வருமானம் ரூ. 452.37 கோடி. இதில் 2022-23-இல் நடைபெற்ற தேர்தல்களுக்காக ரூ. 192.55 கோடியும், ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான “பாரத் ஜோடோ நடைபயணத்திற்கு ரூ. 71.83 கோடியும் செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.