நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வை, மக்களவைத் தேர்தலையொட்டி திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசு.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வை, மக்களவைத் தேர்தலையொட்டி திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசு.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இது தொடர்பான உத்தரவை அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.