நாட்டில் ஒரு சில பெரும் பணக்காரர்களின் கைகளில் செல்வம் பெருமளவில் குவிந்து வருவதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட கோடீஸ்வரர்களின் சொத்து நிமிடத்திற்கு ரூ. 2.5 கோடி அளவிற்கு அதிகரித்ததாகவும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரையின் பகுதிகள் :
நாட்டில் பல்வேறு முரண்பட்ட நிலைமைகள் நிலவுகின்றன. நமது அரசியலமைப்பின் 38(2) சட்டப்பிரிவு, மக்கள் மத்தியில் செல்வத்தின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வைக் குறைத்திட கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும்; சமத்துவமின்மையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்கிறது. பிரிவு 39(c) அனைத்து மக்களுக்கும், பெண்களுக்கும், சமமான வேலைக்கு சமமான ஊதியம் வழங்குவதற்கு போதுமான வாழ்வாதாரத்தை வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று கூறுகிறது. ஆனால் தற்போதைய நடைமுறை இதிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை
‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அறிக்கையின்படி, மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதமாக இருக்கும் பெரும்பணக்காரர் களின் கைகளில், நாட்டின் மொத்த சொத்தில் 40 சதவிகிதத்தை வைத்துள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 50 சதவிகிதமாக இருக்கும் ஏழை, நடுத்தர மக்களிடம் வெறும் 3 சதவிகித சொத்து மட்டுமே உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டு மக்களில் 84 சதவிகிதம் பேரின் வருவாய் மிகப்பெரிய அளவில் குறைந்த அதேநேரத்தில், கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கொரோனாவுக்கு இடையிலும் நிமிடத்திற்கு ரூ. 2.5 கோடி விகிதம் உயர்ந்துள்ளது. ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் பலனடையும் வகையில், ஒன்றிய அரசாங்கம் பெருமுதலாளிகளுக்கான வரியைக் குறைத்து சலுகை அளித்துள்ளது.
5 ஆண்டில் ரூ. 10.6 லட்சம் கோடி வராக் கடன் தள்ளுபடி
நேற்றைய தினம் மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் ஒன்றிய நிதியமைச்சர், தொழிலதிபர்களின் 10.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,623 பெரும்பணக்காரர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கடன் தொகையை வேண்டுமென்றே வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாதவர்கள் (wilful defaulters) பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதுதவிர கார்ப்பரேட் வரியில் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது.
இலங்கை, வங்கதேசத்தை விடவும் மோசமான தனிநபர் வருமானம்
நாட்டின் உண்மையான சித்திரம் என்ன? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத்திற்கான (per capita GDP) ஏணிப்படியில், நாம் 127-ஆவது இடத்தில் இருக்கிறோம். இலங்கைக்கும், ஏன் வங்க தேசத்திற்கும் பின்னே சென்றுவிட்டோம்..? ஆனால் அதே சமயத்தில் நம் நாட்டில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். உலகில் உள்ள பில்லியனர்களின் (பெரும்பணக்காரர்கள்) எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறோம். அநேகமாக நாம் 169 பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம். நாட்டின் பொருளாதார நிலை குறித்து சரியானமுறையில் அலசி ஆராயாவிட்டால் அரசாங்கம் தருகிற புள்ளி விவரங்களும், இலக்கங்களும் போலியானவைகளாக மாறிவிடும்.
இருவித முரண்பாடுகளுக்கு இடையே தவிக்கும் இந்தியா
நேற்றையதினம் ஒரு பக்கத்தில் பங்குச்சந்தை பரிவர்த்தனை பேரணி நடந்தது. அதே சமயத்தில் தில்லியின் நாடாளுமன்ற வீதியில் தலித்துகள், விவசாயத் தொழிலாளர்களின் மாபெரும் பேரணியும் நடைபெற்றதைப் பார்த்தோம். விவசாயிகள் - தொழிலாளர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளைக் கோரிக்கொண்டிருக்கிறார்கள். நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் பங்குச்சந்தை பேரணி நடக்கிறது. ஆட்சியாளர்களின் நண்பர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக அது நடந்திருக்கிறது. இவ்வாறு நம் நாடு இருவிதமான முரண்பாடுகளுக்கும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.