நாடு முழுவதும் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு இந்திய தெரியாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்க தொடர்ச்சியாக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு தொடர்ந்து தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37ஆவது கூட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை எளிமையாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 22,000க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள், தொடர்பு வழியாக இந்தியாவின் மொழி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறீர்கள் ஆனால் அதில் வெற்றி பெற மாட்டீர்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் எதிர்வினையாற்றி இருந்தார். அந்த பதிவில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் #இந்தி_தெரியாது_போடா #StopHindiImposition #InidanAgainstHindiImposition போன்ற ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.