india

img

தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

புதுதில்லி, மார்ச் 2- தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது பெரிய அளவிலான எதிர்க்கட்சியின் தலைவர்) மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரடங்கிய குழுவின் அறிவுரையின் பேரில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த நடைமுறையையே அமல்படுத்திட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்திட ஒரு சுயேச்சையான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அமைவதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் இது ஒன்றே சரியான நிலைப்பாடாகும் என்ற அடிப்படையில் அந்த திசைவழியில் முன்னோக்கி எடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் அடியாகும்.

தேர்தல் ஆணையத்தை ஆட்சியாளர்கள் அடிபணிய வைத்திட மேற்கொள்ளும் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும், அது தன்னை “ஒதுக்கி” வைத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அமர்வாயம் மேலும் கூறியுள்ளது.

மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இயக்குநர், லோக்பால் போன்றவற்றின் நியமனங்கள் சம்பந்தமாக நாடாளுமன்றம் என்ன சட்டம் நிறைவேற்றியிருக்கிறதோ அதே அடிப்படையிலேயே, வெளிப்படைத் தன்மையுடனும், ஜனநாயக முறையிலும், தேர்தல்  ஆணையத்தின் நியமனமும் அமைந்திட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கூறிவந்திருக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

(ந.நி.)