புதுதில்லி, மார்ச் 12- குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்த்துள்ளது. இது, ஒருவரின் குடியுரிமையை மத அடையாளத்துடன் பிணைத்து, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு பிரஜைக்கு பொறிக்கப்படடுள்ள மதச்சார்பின்மை கொள்கையை மீறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசியல் தலைமைக்குழு மேலும் கூறியிருப்பதாவது:
இந்தச் சட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள விதிகள், அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள முஸ்லீம்களுக்கு பாகுபாடான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துகிறது. இந்தச் சட்டத்தின் அமலாக்கம், முஸ்லீம்களின் குடியுரிமையை ஐயுறவுக்கு உட்படுத்தும் விதத்தில் அவர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) என்பதுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த விதிகள், மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் ஒருவரை அடையாளப்படுத்தி, குடிமகனாகப் பதிவு செய்வதற்கான உரிமைகளிலிருந்து அவற்றை ஒதுக்கிடும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை காட்டிவந்த மாநில அரசாங்கங்களை ஒதுக்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு வெளிப்படையாகவே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது மக்களவைக்கான தேர்தல்களுக்கான அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியிட இருக்கக்கூடிய தருணத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தினை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் பிரிவினை உணர்வையும், மதவெறி உணர்வையும் கிளப்ப வேண்டும் என்பதற்காகவே பாஜக இப்போது இவ்வாறு விதிகளை கொண்டு வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தன் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துவதோடு, கேடுகெட்ட இந்தச் சட்டம் ரத்துசெய்யப்படுவதற்கு தான் மேற்கொண்டுவந்த அனைத்து முயற்சிகளையும் மீண்டும் தொடரும் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ந.நி.)