india

img

தேர்தல் பத்திர நடைமுறை ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறை சட்டவிரோதமானது எனக்கூறிய உச்சநீதிமன்றம் இந்த முறையை ரத்து செய்தது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறையை கடந்த 2018ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியது. இதற்கென ரிசர்வ் வங்கி சட்டத்திலும், வருமான வரி சட்டத்திலும், கம்பெனி சட்டத்திலும், வெளிநாட்டு நாணய சட்டத்திலும் சில திருத்தங்களை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டது. இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி விற்பனை செய்து வந்தது. இதில் நன்கொடையாளர்கள் விவரம் பொது வெளியில் பகிரப்படாமல் இருந்து வந்தது. 

தேர்தல் பத்திர நடைமுறையை சிபிஐ(எம்) மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு கடுமையாக விமர்சித்தது. இதையடுத்து சிபிஐ(எம்) சார்பாக பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஏடிஆர் மற்றும் ஜெயா தாகூர் என்பவரும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறை சட்டவிரோதமானது எனவே இந்த நடைமுறையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்களை விற்பதை உடனடியாக நிறுத்தவும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, எஸ்.பி.ஐ வங்கி அளிக்கும் விவரங்களை மார்ச் 13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. 
மேலும், அரசியல் கட்சிகளால் இதுவரை பணமாக்கப்படாத 15 நாட்களில் செல்லுபடியாகக்கூடிய தேர்தல் பத்திரங்களை, அரசியல் கட்சிகள் அதனை வங்கியில் திருப்பி அளிக்க வேண்டும். வங்கி, தேர்தல் பத்திரத்தை வாங்கியவரின் கணக்கிற்கே தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.