ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதிவரை முடிவடைய உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷேன் வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இரண்டு முறை ஐபிஎல் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்டுகள், 190 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் ஷேன் வாட்சன் விளையாடியுள்ளார். 2008 ஐபிஎல்லில் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார்.
ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வாட்சன்.
2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற வாட்சன், தற்போது முதன்முறையாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். அந்த அணியில் பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாகவும் ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.